தமிழ்நாட்டில் சினிமா கட்டணங்களை உயர்த்திக்கொள்ள தமிழக அரசு அனுமதியளித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன்படி தமிழகத்தில் 150 ரூபாய் வரை அதிகபட்சமாக டிக்கட் கட்டணமாக திரையரங்குகள் நிர்ணயிக்க முடியும்.
இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அரசாணையில், சென்னைப் பெருநகரப் பகுதியில் உள்ள உணவகங்களுடன் கூடிய மல்ட்டிப்ளக்ஸ் மற்றும் ஏசி திரையரங்குகளில் அதிகபட்சமாக 150 ரூபாயும் குறைந்தபட்சமாக 15 ரூபாயும் இருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
சாதாரண மல்டிப்ளெக்ஸ் திரையரங்குகளில் அதிகபட்சமாக 118.80 ரூபாயும் குறைந்தபட்சமாக 15 ரூபாயும் இருக்க வேண்டுமென்றும் அதைவிட சில வசதிகள் குறைவான மல்டிப்ளெக்ஸ் திரையரங்குகளில் அதிகபட்சமாக 106.30 ரூபாயும் குறைந்தபட்சம் 15 ரூபாயும் கட்டணம் இருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முனிசிபல் கழகங்களில் அதிகபட்சமாக 62.5 ரூபாயும் குறைந்தபட்சமாக பதினைந்து ரூபாயும் முனிசிபாலிடிகளில் அதிகபட்சமாக 50 ரூபாயும் குறைந்தபட்சமாக 10 ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கிராமப் பஞ்சாயத்துகளில் அதிகபட்சமாக 18.75 ரூபாயும் குறைந்தபட்சமாக 10 ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இது தவிர, மல்ட்ப்ளெக்ஸ் தியேட்டர்கள் என்றால் என்ன என்பது குறித்த வரையறைகளையும் அரசு தெரிவித்துள்ளது. இந்தப் புதிய கட்டணங்கள் அக்டோபர் 9ஆம் தேதி முதல் நடைமுறைக்குவரும் என்றும் அரசாணையில் கூறப்பட்டுள்ளது.
தற்போது தமிழகத்தில் அதிகபட்சமாக 120 ரூபாய் கட்டணம் என்பதுதான் அதிகாரபூர்வமாக நடைமுறையில் இருந்துவருகிறது. இந்தியாவில் ஜி.எஸ்.டி. வரி அறிமுகமான பிறகு, இந்தக் கட்டணத்தை திரையரங்குகளே 153 ரூபாய் என்று உயர்த்திக்கொண்டன.
இந்த நிலையில், தமிழகத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகள் செப்டம்பர் மாத இறுதி முதல் 10 சதவீத கேளிக்கை வரி விதித்தன.
ஜிஎஸ்டி வரி, கேளிக்கை வரி என கிட்டத்தட்ட 40 சதவீதம் அளவுக்கு வரியாக செலுத்த இயலாத காரியம் என்று கூறிய தயாரிப்பாளர்கள், அக்டோபர் 6ஆம் தேதி முதல் புதிய திரைப்படங்கள் திரைக்கு வராது என அறிவித்தனர். இதையடுத்து வெள்ளிக்கிழமையன்று திரைக்குவரவிருந்த சுமார் ஆறு திரைப்படங்கள் வெளியாகவில்லை.
இந்த நிலையில்தான் அரசு இந்த அரசாணையை வெளியிட்டுள்ளது.
திரைப்படங்களைத் தயாரிப்பதிலும் திரையிடுவதிலும் செலவு அதிகரித்திருப்பதால், திரையரங்கக் கட்டணங்களை மாற்றியமைக்க வேண்டுமென திரையுலகைச் சேர்ந்த பல்வேறு அமைப்புகளும் கோரிய நிலையில், அவர்களுடன் அரசின் சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
இந்தப் பேச்சுவார்த்தையின்போது, சென்னை பெருநகரப் பகுதியில் திரையரங்கக் கட்டணங்கள் அதிகபட்சமாக 160 ரூபாயும் குறைந்தபட்சமாக 50 ரூபாயும் வைத்துக்கொள்ள அனுமதிக்க வேண்டுமென திரையுலகின் சார்பில் கோரப்பட்டது. சென்னை நகருக்கு வெளியில் அதிகபட்சமாக 140 ரூபாயும் குறைந்த பட்சமாக 140 ரூபாயும் கோரப்பட்டது.
ஆனால், இந்தக் கட்டணங்கள் மிக அதிகமாக இருப்பதாகக் கருதியதால், ஏற்கனவே இருந்த கட்டணங்களில் இருந்து 25 சதவீதம் உயர்த்திக்கொள்ளவும் அதிகபட்சமாக 150 ரூபாய் வைத்துக்கொள்ளவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த அதிகபட்சக் கட்டணம் என்பது ஜி.எஸ்.டி மற்றும் கேளிக்கை வரியை உள்ளடக்கியதா என்பது குறித்து அரசாணையில் ஏதும் தெரிவிக்கப்படவில்லை.
இந்தக் கட்டண உயர்வு குறித்து தமிழ் திரையுலகினர் எந்தக் கருத்தையும் இதுவரை தெரிவிக்கவில்லை.