துல்கர் சல்மான் நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் சோலோ. 4 கதைகள் கொண்ட இப்படமானது நீர், நிலம், காற்று, நெருப்பு ஆகிய நான்கு அம்சங்களை மையமாக வைத்து உருவாகி உள்ளது.
நீர்…
முதல் கதையான இதில், கல்லூரி மாணவனான துல்கர் சல்மான், கண் தெரியாத பெண்ணான தன்ஷிகாவை காதலிக்கிறார். இரு வீட்டார் சம்மதம் தெரிவிக்க நிலையில், இருவரும் திருமணம் செய்துக்கொள்கின்றனர், அதை தொடர்ந்து ஏற்படும் விளைவுகளை கூறியுள்ளார்கள்.
காற்று…
இரண்டாவது கதையான இதில், கால்நடை மருத்துவராக இருக்கிறார் துல்கர் சல்மான். இவரின் மனைவி விபத்தினால் இறக்கிறார். இந்த இழப்பிற்கு காரணமானவர்களை தேடி பழிவாங்கும் பின்னணியில் திரைக்கதை அமைத்திருக்கிறார்கள்.
நெருப்பு…
மூன்றாவது கதையான இதில், காசுக்காக எவரையும் கொல்லுகிறார் துல்கர் சல்மான். அப்பா-அம்மா பிரச்சனைகளால் மகன்களின் நிலை என்ன ஆகின்றது என்பதை காட்டும் விதமாக உருவாக்கி இருக்கிறார்கள்.
நிலம்…
நான்காவது கதையான இதில், துல்கர் சல்மானும், நேகா ஷர்மாவும் காதலித்து வருகிறார்கள். இவர்களில் காதலில் ஒரு பிரிவு ஏற்படுகிறது. அந்த பிரிவு ஏன் என்பதை சுவாரஸ்யமான திரைக்கதையுடன் சொல்லியிருக்கிறார்கள். இப்படி 4 கதைகளும் ஏதோ ஒரு விதத்தில் துல்கர் சல்மானுக்கு தோல்வியுடனே முடிகின்றது.
மலையாள நடிகரான துல்கர் சல்மானுக்கு தமிழில் பெரும் ரசிகர்கள் இருக்கிறார்கள். இவர் நடிப்பில் வெளியான முந்தைய படம் ரசிகர்கள் மிகவும் கவர்ந்தது. அதுபோல், இந்த படத்திலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் கவர்ந்திருக்கிறார். காதல் காட்சிகள், சண்டைக் காட்சிகள், காமெடி காட்சிகள் என அனைத்திலும் ரசிக்க வைத்திருக்கிறார்.
முதல் கதையில், கண் தெரியாமல் நடித்திருக்கும் தன்ஷிகா, நான்காவது கதையில் காதலியாக வரும் நேகா ஷர்மா ஆகியோர் மட்டும் சிறப்பாக நடித்து மனதில் பதிகிறார்கள். ஸ்ருதி ஹரிகரன், ஆர்த்தி வெங்கடேஷ், தீப்தி ஆகியோர் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள். நாசர், சுஹாசினி ஆகியோர் தன்னுடைய அனுபவ நடிப்பால் பளிச்சிடுகிறார்கள்.
இயக்குனர் மணிரத்னத்தின் உதவி இயக்குனர் பீஜாய் நம்பியார் இப்படத்தை இயக்கியிருக்கிறார். மணிரத்னத்தின் உதவியாளர் என்பது படத்தை பார்க்கும் போது அதிகமாக மனதில் பதிகின்றது. பஞ்ச பூதங்களான, நீர், நிலம், காற்று, நெருப்பு ஆகியவை மூலமாக கதையை சொல்ல முயற்சித்துள்ளார், வானம் சார்ந்த கதையை மட்டும் எடுக்கவில்லை. முதல் கதையும், இரண்டாவது கதையும் மிகவும் சிறப்பாக உள்ளது. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நெருப்புக்கான கதை, சூடுப்பிடிக்கும் என்று பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சுகிறது. 4 கதைகளையும் முடிச்சுப்போடாமல், கதை சொன்ன விதம் புதுமை.
இசை, ஒளிப்பதிவு, எடிட்டிங் என டெக்னிக்கல் விஷயங்கள் அனைத்தும் படத்திற்கு பெரும் பலம் சேர்த்திருக்கிறது.
மொத்தத்தில் ‘சோலோ’ புதுமை.