சிம்பு நடித்திருக்கும் வாலு படத்தை வெளியிட நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. இதனை அறிந்த தனுஷ் தொலைபேசியில் சிம்புவுக்கு ஆறுதல் கூறியுள்ளார்.
நிக் ஆர்ட்ஸ் சக்ரவர்த்தி தயாரிப்பில் மூன்றாண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட படம் வாலு. சக்ரவர்த்தி இயக்கத்தில் சிம்பு நடித்துவந்த வேட்டை மன்னன் படத்தை நிறுத்திவிட்டு வாலு படத்தை தொடங்கினர். மூன்றே மாதத்தில் படத்தை முடித்து வெளியிடுவதாக திட்டம்.
வாலு தொடங்கிய பின் ஆல்பம் போடுவது, ஆன்மீக யாத்திரை என்று சிம்பு வேறு விஷயங்களில் கவனம் செலுத்தியதால் படம் முடிய இரண்டு வருடங்களுக்கு மேல் ஆனது. படத்தை வெளியிடுவதிலும் சிக்கல் ஏற்பட்டது.
அதனைத் தொடர்ந்து தனது சிம்பு சினி ஆர்ட்ஸ் மூலம் படத்தை வெளியிட முன் வந்தார் சிம்புவின் தந்தை. டி.ஆர். ஜுலை 17 படம் வெளியாகும் என தேதியும் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், பிரபல நிறுவனம் ஒன்று, வாலு படத்தின் உரிமையை எங்களுக்கு பத்து கோடிக்கு தருவதாக ஒப்பந்தம் போட்டுவிட்டு இப்போது வேறு ஒருவருக்கு தந்திருக்கிறார்கள் என வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்துள்ளது நீதிமன்றம்.
ஜுலை 17 வாலு படத்துடன் தனுஷின் மாரியும் வெளியாவதாக இருந்தது. வாலு தடை காரணமாக மாரி மட்டுமே 17 -ஆம் திகதி வெளியாகிறது. வாலு படத்துக்கு தடை விதிக்கப்பட்டது அறிந்ததும் சிம்புவை தொலைபேசியில் தொடர்பு கொண்ட தனுஷ், அவருக்கு ஆறுதல் கூறியுள்ளார்.