ராணுவ அதிகாரியை திருமணம் செய்துக் கொண்ட தபு, அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தன்னுடைய 2 மகள்களையும், தம்பியையும் அழைத்துக் கொண்டு, ஊருக்கு ஒதுக்கு புறமாக இருக்கும் ஒரு பங்களாவில் தங்கி வருகிறார். இந்த வீட்டிற்கு வந்ததில் இருந்து அமானுஷ்ய சக்தி வீட்டை சுற்றி வருவதாக உணர்கிறார் தபு.
இந்நிலையில், இந்த அமானுஷ்ய சக்தி தபுவை கற்பழித்து விடுகிறது. இந்த வீட்டை விட்டு வெளியே செல்ல முடிவு செய்கிறார்கள். ஆனால், வீட்டின் முன்னாள் உரிமையாளர் வெளிநாட்டில் இருப்பதால், இந்த வீட்டை வேற யாருக்காவது விற்கும் வரை, அங்கு இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.
வீட்டில் இருக்க மறுக்கும் தபுவிடம் அந்த அமானுஷ்ய சக்தி தொந்தரவு கொடுக்கிறது. இந்த அமானுஷ்ய சக்தி, தபுவை தொந்தரவு செய்ய காரணம் என்ன? தபுவுக்கும் அந்த ஆவிக்கும் என்ன சம்மந்தம்? என்பதே படத்தின் மீதிக்கதை.
ஹாவா என்ற பெயரில் 2003ம் ஆண்டு இந்தியில் வெளியான இப்படம், தற்போது ‘ராஜலீலை’ என்ற பெயரில் வெளியாகி இருக்கிறது. அப்போது இருந்த தொழில் நுட்பத்திற்கு இப்படத்தை அன்று பார்க்கும் போது, பயந்திருக்கலாம். ஆனால், தற்போது இப்படத்தை பார்க்கும் போது, பெரியதாக பயம் ஏதும் ஏற்படவில்லை. சுவாரஸ்யம் இல்லை. பேயை பார்க்கும் போது, காமெடியாக இருக்கிறது.
படத்தின் முதன்மை கதாபாத்திரமாக இருக்கும் தபுவின் நடிப்பு அபாரம். இவரை சுற்றியே படம் நகர்கிறது. பேய் பயப்படும் காட்சியில் அனுதாபத்தை ஏற்படுத்தி இருக்கிறார். ஹன்சிகா இப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார். இவருடைய நடிப்பும் ரசிக்கும் படியாக உள்ளது.
நாம் ஏற்கனவே பார்த்த பழைய கதைதான் என்றாலும், அன்றைய காலகட்டத்தில் இந்தியில் இப்படம் சூப்பர் ஹிட்டாகி இருக்கிறது. படத்தின் பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.
மொத்தத்தில் ‘ராஜலீலை’ பழைய லீலை.