செலிபிரிட்டி கிளாசிகோ என்ற பெயரில் நடக்கும் தொண்டு நிறுவனத்துக்கு நிதி சேர்க்கும் கால்பந்து போட்டியில் பாலிவுட் நடிகர்களும் இந்திய கிரிக்கெட் அணி வீரர்களும் பங்கேற்றனர். கடந்த வருடம் நடந்த முதல் சீசனில் இரு அணிகளும் தலா இரண்டு கோல்கள் அடிக்க ஆட்டம் சமனில் முடிந்தது.
இந்த வருடம் இரண்டாவது சீசனுக்கான போட்டி நேற்று மும்பையில் நடந்தது . இந்த போட்டியில் விராட் கோலியின் ஆல் ஹார்ட் எஃப் சி அணி 7-3 என்ற கோல் கணக்கில் அபாரமாக வென்றது.
விராட் கோலி தலைமையிலான ஆல் ஹார்ட் எஃப் சி அணியில் தோனி, ஷிகர் தவான், உமேஷ் யாதவ், மனிஷ் பாண்டே முதலான வீரர்கள் இருந்தனர்.
ஆல் ஸ்டார்ஸ் அணியில் பாலிவுட் நடிகர்கள் ரன்பீர் கபூர், ஆதித்யா ராய் கபூர், அர்ஜுன் கபூர் உள்ளிட்ட வீரர்கள் இடம்பெற்றிருந்தனர்.
ஆட்டம் தொடங்கிய ஐந்தாவது நிமிடத்திலேயே தோனி கோல் அடித்தார். 39 வது நிமிடத்தில் அவர் மீண்டும் ஒரு கோல் அடித்தார்.
அவ்விரு சிறப்பான கோல்களுக்காக தோனிக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.
கிரிக்கெட்டைப் போலவே கால்பந்திலும் ஆட்ட நாயகன் விருதை பெற்றதையடுத்து சமூக வலைதளங்களில் தோனிக்கு பாராட்டு கிடைத்தன.