ஒலிம்பிக் மற்றும் உலக தடகள போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் ஊக்கமருந்து பயன்படுத்துவதை தடுப்பதற்காக உலக ஊக்கமருந்து தடுப்பு அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் 2008, 2012 ஒலிம்பிக்கில் பங்கேற்ற தடகள வீரர்களின் மாதிரிகளை மீண்டும் பரிசோதனைக்கு உட்படுத்தியது.
அப்போது பெரும்பாலான வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தடை செய்யப்பட்ட ஊக்கமருந்து உட்கொண்டது தெரியவந்தது. இதனால் அவர்களுக்கு தடைவிதிக்கப்பட்டது. ஊக்கமருந்து உட்கொண்டு கலந்து கொள்வதால் திறமையான வீரர்களின் சாதனைகள் வீணடிக்கப்படுகிறது.
இதனால் வாடா (World Anti-Doping Agency) தடகள போட்டியில் வெளிப்படைத் தன்மை மற்றும் வீரர்கள் நியாயமாக நடந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் ஊக்கமருந்து சோதனையை நடைமுறை நடத்தி வருகிறது.
இதேபோல் இந்திய விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் நியாயமாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தேசிய ஊக்க மருந்து தடுப்பு அமைப்பு (NADA- National Anti-Doping Agency) செயல்பட்டு வருகிறது.
அனைத்து வகை போட்டிகளிலும் பரிசோதனை நடத்தி வரும் நாடா, கிரிக்கெட் வீரர்களுக்கு மட்டும் சோதனை நடத்தாமல் இருக்கிறது. இந்நிலையில் இந்தியாவில் நடைபெறுகின்ற கிரிக்கெட் போட்டி தொடரின்போது கலந்து கொள்ளும் வீரர்களுக்கு சோதனை நடத்தப்பட வேண்டும் என்று மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து இந்திய விளையாட்டுத்துறை அமைச்சக செயலாளர் ராகுல் பட்நாகர் கூறுகையில் ‘‘இந்தியாவில் நடைபெறும் கிரிக்கெட் தொடரின்போது வீரர்களிடம் நாடாவின் ஊக்கமருந்து தடுப்பு அதிகாரிகள் சென்று மாதிரிகளை சேகரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளேன். ஒருவேளை ‘நடா’ நடைமுறைக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் செயல்பாடு இருந்தால், இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க தயங்கமாட்டோம்.
முதற்கட்டமாக போட்டி நடைபெறுகின்ற போது ரத்தம் மற்றும் சிறுநீர் சோதனைக்கு எடுத்துக் கொள்ளப்படும். பின்னர் மெதுவாக அதில் இருந்து முன்னேற்றம் காணப்படும்’’ என்று கூறியுள்ளார்.