திருமணமும், நெருங்கிய நண்பர்களை கொண்டிருப்பதும் டிமென்சியா எனப்படும் நினைவாற்றல் இழப்பு நோய்க்கு எதிரான பாதுகாப்பை வழங்க உதவலாம் என்று லஃவ்பேரஃப் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
6,677 வயதுவந்தோரை ஏழு ஆண்டுகள் தொடர்ந்து கண்காணித்து செய்யப்பட்ட இந்த ஆய்வு, மூப்பியல் சஞ்சிகை என்று பொருள்படும் “ஜெர்னல்ஸ் ஆப் ஜெரண்டாலஜி” என்ற பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளது.
ஒரு நபர் தொடர்பு வைத்திருக்கும் சமூக வட்டத்தின் அளவை விட அதன் தரமே மிக முக்கியமானது என்று தெரியவந்துள்ளதாக இந்த ஆய்வு அணியினர் தெரிவித்துள்ளனர்.
“பொருளுள்ள சமூக தொடர்புகளை” பராமரிக்க இது நோயாளிகளுக்கு மிகவும் உதவுகிறது என்று அல்சைமர்ஸ் சொசைட்டி கூறியுள்ளது.
இந்த ஆய்வை தொடங்கியபோது, இதில் ஈடுபட்டோரிடம் யாருக்கும் டிமென்சியா இருக்கவில்லை. ஆனால், தொடர் கண்காணிப்பின்போது, 220 பேருக்கு டிமென்சியா இருப்பது கண்டறியப்பட்டது.
டிமென்சியா வருவதற்கான ஆபத்தை சமூக வாழ்க்கை எவ்வாறு பாதிக்கிறது என்பதை அறிய தரும் துப்புகளை கண்டறிய,டிமென்சியா பெற்றிருப்போருக்கும், பெறாதோருக்கும் இடையிலான அறிகுறிகளை ஆய்வாளர்கள் ஒப்பிட்டு பார்த்தனர்.
நண்பர்கள் என்று வருகிறபோது, நண்பர்களின் எண்ணிக்கையல்ல, தரமே மேலானது என்று கண்டறியப்பட்டுள்ளது.
“நீங்கள் மக்களால் சூழப்பட்டிருக்கலாம். ஆனால், எவ்வளவு பேரிடம் மிகவும் நெருக்கிய நட்பு வட்டத்தை கொண்டிருக்கிறீர்களோ, அந்த தரம்தான் டிமென்சியா உருவாகும் ஆபத்தை குறைக்கிறது. அதிகம் பேரிடம் நட்பு கொண்டிருக்கும் எண்ணிக்கை அல்ல” என்று பேராசிரியர் ஈஃப் ஹோகர்வோஸ்ட் கருத்து தெரிவித்துள்ளார்.
மேசமான உடல் நலத்தோடு தொடர்புடையதாக இருக்கும் மன அழுத்த பாதிப்பின் சக்தியை குறைக்கின்ற சாதனமாக நெருங்கிய நட்பு வட்டாரம் இருப்பதாக அவர் கருதுகிறார்.
மாற்றியமைத்து கொள்ளலாம் என்று விவரிக்கப்படும் டிமன்சியா ஆபத்தை ஏற்படுத்தும் இந்த அம்சங்கள் 35 சதவீதம் வரையான ஆபத்துக்குதான் வழிவகுக்கிறது. பிற 65 சதவீத டிமென்சியா ஆபத்து மாற்ற முடியாத காரணங்களால் ஏற்படுவதாக நம்பப்படுகிறது.
திருமணம் செய்தவர்களை விட தனியாக வாழ்பவர்களுக்கு டிமென்சியா ஏற்படும் ஆபத்து இரு மடங்கு அதிகமாக இருப்பதாக இந்த ஆய்வு பரிந்துரைக்கிறது.
“ஒவ்வொரு 100 திருமணமாகாதோருக்கு மேலதிகமான ஒரு நோய் இருப்பதை என்பதை இது சுட்டுகிறது” என்று அல்சைமர் சொசைட்டியிலுள்ள ஆய்வு இயக்குநர் டாக்டர் டௌக் பிரவுன் தெரிவித்திருக்கிறார்.
மக்களை ஒரு குறிப்பிட காலத்திற்கு மட்டுமே கண்காணிக்கின்ற ஆய்வால், ஒரு நோய்க்கான முழு காரணத்தையும், விளைவுகளையும் நிரூபித்து விட முடியாது.
கண்டறிவதற்கு தசாப்தங்களுக்கு முன்னரே டிமென்சியா மூளையில் தொடங்கி விடுவதாக அறியப்படுகிறது. இதனால் மிகவும் முன்னதாகவே ஏற்படும் மூளையில் ஏற்படும் மாற்றங்கள் மக்களின் சமூக தொடர்பாடலை பாதிக்கலாம்.
எப்படி பார்த்தாலும், தனிமை என்பது டிமென்சியாவிற்கு உண்மையான ஒரு பிரச்சனையாக இருந்தது என்று டாக்டர் பிரவுன் கூறியுள்ளார்.
“மக்கள் சரியான ஆதரவு பெறாவிட்டால், டிமென்சியா நம்பமுடியாத வகையில் தனிமைப்படுத்தும் அனுபவமாக அமையலாம்” என்று அவர் கூறியுள்ளார்.
“பொருளுள்ள சமூக தொடர்புகளை பராமரிப்பதற்கும், அவர்கள் விருப்பம்போல வாழ்க்கையை தொடர்வதற்கும் டிமென்சியா பெற்றிருப்போருக்கு ஆதரவு அளிப்பது மிகவும் முக்கியமானது” என்று அவர் கூறியுள்ளார்.