நடிகர் கமல்ஹாசன் சமீபகாலமாக பல அரசியல் சார்ந்த கருத்துகளை டிவிட்டர் மூலமும், தொலைகாட்சி மூலமும் தெரிவித்து வருகிறார். தமிழ் வார இதழ் ஒன்றில் கட்டுரை எழுதிவரும் அவர், ‘இந்து தீவிரவாதம் இனியும் இல்லை என கூறமுடியாது’, என அக்கட்டுரையில் கருத்து தெரிவித்திருந்தார்.
அவரது இந்த கருத்துக்கு பா.ஜ.க மற்றும் சிவசேனா கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கமலின் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளதாக பா.ஜ.க செய்தித்தொடர்பாளர் காட்டமாக கூறினார்.
இந்நிலையில், கமலின் இந்த கருத்தை எதிர்த்து உத்தரப்பிரதேச மாநிலத்தில் பனாரஸ் காவல்நிலையத்தில் ஒருவர் புகார் அளித்துள்ளார். இதையடுத்து, கமல்ஹாசன் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் பனாரஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மேலும், இந்து மதத்தை புண்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்த கமல் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என வாரணாசி கோர்ட்டில் வழக்கறிஞர் ஒருவர் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நாளை விசாரணைக்கு எடுக்கப்படும் என நீதிபதி அறிவித்துள்ளார்.
கமல்ஹாசனின் இந்த கருத்து இந்துக்களுக்கு எதிராக இருப்பதாகவும், அவரது இந்த கருத்து இந்துக்களின் மனதை புண்படுத்துவது போல அமைந்துள்ளது என வழக்கு தொடுத்தவர் தெரிவித்துள்ளார்.