70 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் அடிப்படை வங்கியியல் சேவைகளை வீட்டிலேயே பெற வழிசெய்ய வேண்டும் என ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. இந்த ஆண்டு டிசம்பர் மாதம் 31-ம் தேதிக்குள் இத்திட்டத்தை அமல்படுத்த வேண்டுமெனவும் கூறப்பட்டுள்ளது.
மூத்த குடிமக்கள் மற்றும் பார்வை குறைபாடு உள்ளிட்ட பிரச்சனைகளால் பாதிக்கப்பட்ட மாற்று திறனாளிகளுக்கு பணம் போடுதல், எடுத்தல், காசோலைகள் மற்றும் டி.டி. போன்ற அடிப்படை சேவைகளை வீட்டிற்கு சென்று வழங்க வேண்டும் என்று வங்கிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளன.
வங்கிகளில் 70 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு சரியான வங்கி சேவைகள் அளிக்கப்படாமல் அவர்கள் திருப்பி அனுப்பப்படுவதாக கிடைத்த புகார்களை தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்த தரப்பினர் டிஜிட்டல் பரிவர்த்தனை செய்வது கடினம் என்பதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு செமிப்பு கணக்கு வைத்திருப்பவர்களுக்கும் மாதந்தோரும் இலவசமாக 25 காசோலைகள் வழங்க வேண்டும் எனவும், அந்த காசோலைகள் மூலம் பணம் எடுக்கும் போது அவர்கள் நேரில் வரவேண்டும் என வங்கிகள் கட்டாயப்படுத்தக்கூடாது எனவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
அனைத்து தேவையான கோப்புகளும் சமர்பிக்கப்பட்டு தொடங்கப்பட்ட சேமிப்பு கணக்கு அந்த கணக்கு வைத்திருப்பவர்களின் பிறந்த தேதிப்படி தானாக மூத்த குடிமக்கள் கணக்காக மாற்றப்படும் வேண்டும் என கூறப்பட்டுள்ளது. எனவே இனி அதற்காக தனியாக கோரிக்கை கடிதம் எழுத வேண்டிய அவசியம் இருக்காது. மேலும் ஆண்டுதோறும் வரிச்சலுகைக்கான 15G/H வடிவங்களை அனைத்து வங்கிகளும் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கணக்குதாரர்களுக்கு வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.