சல்மான் கான் தானே தயாரித்து நடித்த ‘பஜ்ரங்கி பாய்ஜான்’ திரைப்படம் ஒரு காது கேளாத, பேச முடியாத குழந்தையை அவளது குடும்பத்துடன் இணைக்க முயற்சிக்கும் ஒருவனைப் பற்றிய கதை.
சல்மான் தன்னுடைய வழக்கமான பாணியில் இருந்து விலகி, மிகவும் அமைதியாக ஓரிரு வார்த்தைகள் பேசி அனைவரையும் ரசிக்க வைத்திருக்கிறார். சல்மானின் சினிமாக்களில் இந்த திரைபடத்தில்தான் அவர் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருப்பதாக இப்படத்தைப் பார்த்தவர்கள் பலர் கருத்து தெரிவிக்கின்றனர்.
சல்மான் கானின் நண்பரும், சக நடிகருமான அமீர் கான் ‘பஜ்ரங்கி பாய்ஜான்’ படத்தை பார்த்து விட்டு, கைக்குட்டையில் கண்ணைத் துடைத்தவாறு வெளியேறினார்.
தன்னுடைய டுவிட்டர் பக்கத்திலும் ‘பஜ்ரங்கி பாய்ஜான்’ படம் குறித்து கருத்து வெளியிட்டார். அதில், ‘சல்மான் கானின் மிகச்சிறந்த படம்! அவரின் சிறந்த நடிப்பில் ‘பஜ்ரங்கி பாய்ஜான்’ அமைந்துள்ளதாகவும்’ குறிப்பிட்டிருந்தார்.
சல்மானை மட்டுமின்றி படத்தின் இயக்குனர் மற்றும் குழந்தை நட்சத்திரத்தையும் அவர் பாராட்டினார். இந்த படத்தின் கதை, திரைக்கதை மற்றும் வசனமும் சிறப்பாக அமைந்துள்ளது என்றும், தனிச் சிறப்பான கதையை இயக்கிய கபீர் கானுக்கும் வாழ்த்து தெரிவித்தார். ‘குட்டி பெண் ஹர்ஷாலி மல்ஹோத்ரா தன் நடிப்பால் இதயத்தை திருடியதாகவும்’ அவர் குறிப்பிட்டிருந்தார்.
ரசிகர்கள் மனதை கொள்ளைகொண்ட இந்த திரைப்படம் வசூலையும் அள்ளிக் கொண்டிருக்கிறது. இந்தியாவில் மட்டுமின்றி பாகிஸ்தானிலும் இந்த திரைப்படம் வேற்றுமையை மறந்து வெற்றியடைந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.