நயன்தாரா நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் ‘அறம்’. கோபி நயினார் இயக்கியுள்ள இப்படத்தை கோட்டப்பாடி ராஜேஷ் தயாரித்திருக்கிறார். இப்படத்தில் நயன்தாரா கலெக்டராக நடித்திருக்கிறார். ஏழை மக்களின் தண்ணீர் பிரச்சனை, ஆழ்துளை கிணறு உள்ளிட்ட பிரச்சனைகளை இப்படத்தில் காண்பிக்கப்பட்டது.
மேலும் அதிகாரிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் இடையே ஏற்படும் பிரச்சனைகளையும், அதிகாரிகள் தங்களுடைய பணிகளை செய்வதில், எப்படிப்பட்ட இன்னல்கள் வருகிறது என்பதை இயக்குனர் திரைக்கதையாக அமைத்திருந்தார். இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்நிலையில், இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதிலும் நயன்தாரா கதாநாயகியாக நடிக்க இருக்கிறார். இந்த பாகத்தில் தீவிர அரசியல்வாதியாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
முதல் பாகத்தில் நயன்தாரா கலெக்டர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, அரசியலில் ஈடுபட இருப்பதாக படத்தை முடித்திருப்பார்கள். அதன் தொடர்ச்சியாக ‘அறம் 2’ உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.