திருச்சி மாவட்டம் துறையூரை சேர்ந்தவர் வரதராஜன். வியாபாரியான இவரிடம் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன், நிதி நிறுவனம் ஒன்றில் பல கோடி ரூபாய் கடன் பெற்று தருவதாக கூறி ரூ.30 லட்சம் வாங்கினாராம். ஆனால் கடனை பெற்று தராததால் தனது பணத்தை திருப்பி தருமாறு வரதராஜன் கேட்டுள்ளார்.
இதையடுத்து பவர் ஸ்டார் சீனிவாசன், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.30 லட்சத்துக்கான காசோலையை வழங்கினார். அந்த காசோலையை வரதராஜன் வங்கியில் மாற்ற முயன்ற போது பணம் இல்லை என திரும்பியது. இதனால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர் இது தொடர் பாக துறையூர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு பவர் ஸ்டார் சீனிவாசனுக்கு பல முறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகாமல் இருந்து வந்தார். நேற்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்த போதும் அவர் ஆஜராகவில்லை.
இதையடுத்து நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசனுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து துறையூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி வடிவேல் உத்தரவிட்டார்.