அரியானா மாநிலம் தலைநகரான சண்டிகரிலிருந்து 93 கி.மீ. தொலைவில் உள்ளது குருசேத்திரா நகரம். புனித தலமாக போற்றப்படும் இந்த பகுதியில் நடைபெற்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குருசேத்திராவைச் சேர்ந்த சோனு மாலிக் என்பவர் அப்பகுதியில் போட்டோ ஸ்டுடியோ வைத்திருந்தார். அவருக்கு சமீர் (11), சிம்ரன்(8), சமர்(5) என்ற 3 மகன்கள் இருந்தனர். இவர்கள் மூன்று பேரும் கடந்த ஞாயிறன்று தனது நண்பர்களுடன் விளையாட சென்றனர். திடீரென அவர்கள் மூன்று பேரையும் காணவில்லை. கிராமத்தில் இருந்த அனைவரும் சிறுவர்களை தேட ஆரம்பித்தனர்.
இச்சம்பவம் குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் குடும்பத்தினர் அனைவரிடமும் விசாரணை நடத்திய போது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. சிறுவர்களின் தந்தை கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில், போலீசார் அருகிலிருந்த காட்டுப்பகுதிக்கு சென்று சோதனை நடத்தியதில் சிறுவர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டது.
இந்நிலையில், கடந்த ஞாயிறன்று சோனு மாலிக்கின் உறவினர் சிறுவர்களை ஏமாற்றி தனது காரில் அழைத்து வந்துள்ளார். தங்களுக்கு நேர போகும் கொடூரத்தை அறியாமல் சிறுவர்களும் காரில் சென்றுள்ளனர்.
சிறுவர்களை அருகில் உள்ள காட்டிற்கு அழைத்துச் சென்றார். அங்கு காத்திருந்த சோனு மாலிக் தனது திட்டத்தை நிறைவேற்ற தொடங்கினார். முதலில் தனது மூத்த மகனை துப்பாக்கியால் சுட்டு கொன்றார். துப்பாக்கி சத்தம் தனது மற்ற மகன்களுக்கு கேட்காமல் இருக்க ஜீப்பில் அதிக சத்தத்துடன் பாட்டை ஒலிக்க செய்தனர்.
பின்னர் ஒவ்வொரு மகனாக அழைத்து வந்து சுட்டுக் கொன்று வீட்டிற்கு சென்று விட்டனர். மற்றவர்களுடன் சேர்ந்து அவர்களும் குழந்தைகளை தேடி உள்ளனர். அவர்களின் நடத்தையில் சந்தேகம் வந்ததால் விசாரணை நடத்திய போது உண்மை வெளிவந்ததாக போலீசார் தெரிவித்தனர். அவர்கள் இருவரையும் கைது செய்தனர்.
தந்தையே தனது சொந்த மகன்களை இரக்கமின்றி கொன்ற சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும், பெரும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.