உருகுவேவில் உள்ள மினாஸ் என்ற சிறிய நகரம், உலகிலேயே மிகப்பெரிய `பார்பிக்யூ` நிகழ்வை நடத்தி, கறிகள் சமைத்து புதிய கின்னஸ் உலக சாதனை நிகழ்த்தியுள்ளது.
கிட்டத்தட்ட 200 சமையல் கலைஞர்கள் இணைந்து, 60 டன் மரத்தை பயன்படுத்தி, மிகப்பெரிய, நீண்ட `பார்பிக்யூ` கறி சமைத்தனர். இதில், 16.5 டன் கறி, 14 மணிநேரத்திற்கு சமைக்கப்பட்டது.
உருகுவே, வென்றிருந்த இந்த பட்டத்தை, 2011ஆம் ஆண்டு, அர்ஜென்டீனா முறையடித்து கைப்பற்றியிருந்தது. அதை மீண்டும் முறியடிக்கவே இந்த முயற்சி எடுக்கப்பட்டது.
இந்த இருநாடுகளுக்குமிடையே, யார் அதிக மாட்டுக்கறியை உற்பத்தி செய்கிறார்கள் என்பதில் பெரிய போட்டி நிலவுகிறது.
உருகுவே நாடு, உலகளவில் மாட்டுக்கறி ஏற்றுமதியில் முக்கிய இடத்தில் உள்ளது.
இந்த உலக சாதனைக்காக பயன்படுத்தப்பட்ட மாட்டுக்கறிகள் போட்டிக்கு முன்பு, சமைக்கப்பட்ட பிறகு என இரண்டுமுறை எடைபார்க்கப்பட்டன.
புதிய கின்னஸ் உலக சாதனையைப்படைக்க, இந்த கறியின் எடை, 2008ஆம் ஆண்டு, அர்ஜென்டீனாவின் லா பாம்பா நகரில் நடந்த போட்டியில் இருந்த கறியின் எடையான 9.16 டன்களை விட அதிகமாக இருக்கவேண்டும்.
உருகுவே நடத்திய `பார்பிக்யூ` சாதனை முயற்சியில், கறியின் எடை, 10.36 டன்கள் இருந்ததை, நோட்டரி உறுதி செய்துள்ளது.
இந்த நிகழ்ச்சியில் பங்கெடுத்த உருகுவே சமையல் கலைஞர் ஒருவர், `இந்த நிகழ்ச்சி, கின்னஸ் சாதனை தொடர்பானது அல்ல. இது அர்ஜென்டீனாவை முறியடிப்பது தொடர்பானது` என்று ஏ.எஃப்.பி செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார்.
இந்த கறியுடன் சாப்பிட, நான்கு ஆயிரம் கிலோ எடைகொண்ட ரஷ்யன் சாலட்டையும், கலைஞர்கள் தயார் செய்திருந்தனர்.
ஆயிரக்கணக்கான மக்கள், இந்த சாதனை முயற்சியை காணவும், உணவை ருசிபார்க்கவும், அங்கு கூடியிருந்ததாக, நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் கூறினர்.
சமைக்கப்பட்ட கறி, ஒவ்வொறு தட்டும், ஐந்து டாலர்களுக்கு மேல் விற்கப்பட்டது.