சென்னையில் மிகவும் வசதியானவரான வி.டி.வி கணேஷின் மகன் சந்தானம். இவருடைய நண்பர் சேது, தாதாவாக இருக்கும் சம்பத்தின் தங்கையை காதலிக்கிறார். இவர்கள் காதலுக்கு பல எதிர்ப்புகளை மீறி உதவி செய்கிறார் சந்தானம். இதனால், கோபமடையும் சம்பத், சந்தானத்தை கொல்ல முயற்சி செய்கிறார்.
சந்தானமோ சென்னையில் இருந்தால் பிரச்சனைகள் வரும் என்று பெங்களூரு சென்று விடுகிறார். அங்கு வைபவியை பார்த்தவுடன் காதல் வலையில் விழுகிறார். ஒரு கட்டத்தில் இருவரும் காதலித்து வருகிறார்கள். வைபவியின் அண்ணன் இவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து சந்தானத்தை கொலை செய்ய திட்டம் போடுகிறார். இதற்கிடையில் வைபவியை கொலை செய்ய ஒரு கும்பல் முயற்சி செய்கிறது.
இறுதியில் சந்தானம் எப்படி இந்த பிரச்சனைகளை சமாளித்தார்? நாயகி வைபவியை திருமணம் செய்தாரா? தாதாவான சம்பத், சந்தானத்தை கொலை செய்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தில் நாயகனாக நடித்திருக்கும் சந்தானம், தோற்றம், ஸ்டைல், நடனம், சண்டை என அனைத்திலும் கலக்கி இருக்கிறார். ரோபோ சங்கரை கலாய்ப்பது, விவேக்குடன் பேசும் காட்சிகள், சம்பத்துடனான காட்சிகள் எல்லாம் ரசிக்கும் படி நடித்திருக்கிறார். ”பஞ்ச் டயலாக் பேசிட்டு அடிக்கிறது எல்லாம் பழைய ஸ்டைலு, பஞ்ச் டயலாக் பேசுறவனை அடிக்குறதுதான் புது ஸ்டைலு”, ”போனவாரம் கூட ஓட ஓட ஒருத்தனை வெட்டுனேன், ஓடும்போது முடி வெட்றது ரொம்ப கஷ்டமாச்சே, எப்படி வெட்டுன” போன்ற வசனங்கள் அவருக்கே உரிய ஸ்டைலில் அசத்தி இருக்கிறார் சந்தானம்.
நாயகியாக நடித்திருக்கும் வைபவி படம் முழுக்க வருகிறார். ஆனால், அவருக்கு எந்த முக்கியத்துவமும் தரப்படவில்லை. விவேக்கின் காமெடியும், ரோபோ சங்கரின் காமெடியும் படத்திற்கு பலமாக அமைந்திருக்கிறது. வி.டி.வி கணேஷ், சஞ்சனா சிங், மயில்சாமி, சேது, பவர்ஸ்டார் ஆகியோர் சரியான கொடுத்த கதாபாத்திரத்தை செவ்வனே செய்திருக்கிறார்கள்.
தங்கைக்காக எதையும் செய்யத் துடிப்பவராக நடித்திருக்கிறார் சம்பத். சரத் லோகிதஸ்வாவும், நாராயண் லக்கியும் தங்களின் வழக்கமான வேலையை செய்துவிட்டுப் போகிறார்கள்.
குடும்பத்தினரின் சம்மதத்தோடு காதலியைத் திருமணம் செய்ய வேண்டும் என்ற கருத்தை சொல்லி இருக்கிறார் இயக்குனர் சேதுராமன். கொஞ்சம் பழைய கதை என்றாலும், அதில் கொஞ்சம் வித்தியாசம் காண்பிக்க முயற்சி செய்திருக்கிறார். விவேக், சம்பத் காட்சிகளில் பழைய டெக்னிக் பயன்படுத்தப்பட்டிருப்பதால் சோர்வூட்டுகிறது. லாஜிக் மீறல்கள், நம்ப முடியாத காட்சிகள், முந்தைய தமிழ்ப் படங்களின் சாயல்கள் என அனைத்தும் படத்திற்கு தோய்வை ஏற்படுத்தி இருக்கிறது. இவற்றை தவிர்த்து படத்தை ரசிக்கலாம்.