விரைவில் பிறக்கவுள்ள புத்தாண்டை முன்னிட்டு கர்நாடக மாநில தலைநகரான பெங்களூருவில் உள்ள நகவாரா பகுதியில் இருக்கும் ஒயிட் ஆர்ச்சிட் நட்சத்திர விடுதியில் வரும் 31-ம் தேதி பின்னிரவில் புத்தாண்டு விழா கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சன்னி லியோன் பங்கேற்பதாக இருந்த இந்த நிகழ்ச்சிக்கு 8 ஆயிரம் டிக்கெட் விற்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியை நடத்த கூடாது. ஆபாச நடிகை சன்னி லியோனை இங்கு அனுமதிக்க கூடாது என சில கன்னட அமைப்பினர் போராட்டங்களில் ஈடுபட்டனர். சில இடங்களில் சன்னி லியோனின் கொடும்பாவிகளும் எரிக்கப்பட்டன. பெருகிவரும் எதிர்ப்பினால் இந்த நிகழ்ச்சிக்கு போலீசார் அனுமதி அளிக்காமல் இருந்தனர்.
இந்நிலையில், பெங்களூரு நகரில் இதைப்போன்ற நிகழ்ச்சிகளுக்கு அனுமதி அளிக்க கூடாது என அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என கர்நாடக மாநில உள்துறை மந்திரி ராமலிங்க ரெட்டி தெரிவித்தார். இதையடுத்து சன்னி லியோன் கலந்துகொள்ளும் நிகழ்ச்சி நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு காவல்துறையிடம் முறையாக அனுமதி பெறாததால் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் காவல் துறை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிமன்றம், இந்த நிகழ்ச்சிக்கு அனுமதி அளிக்க காவல்துறை பரிசீலனை செய்ய வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.
இது தொடர்பாக டிஜிபி கிரிஷ் கூறுகையில், ‘‘கடந்த ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது சில பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார்கள். இதன் காரணமாக சன்னி லியோன் நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்க முடியாது’’, என்றார். இதனால் சன்னி லியோன் கலந்து கொள்வதாக இருந்த புத்தாண்டு நிகழ்ச்சியை எதிர்நோக்கி இருந்தவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.