திரை உலகில் வெற்றிக்கொடி நாட்டியவர் ஜெயலலிதா. பின்னர் தமிழ்நாட்டின் முதல் அமைச்சராக உயர்ந்தார்.
திரை உலகிலும், அரசியலிலும் தனி அடையாளமாக இருந்த ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி மொழியில் தயாராக இருக்கும் இந்த படத்துக்கு ‘புரட்சி தலைவி’ என்று பெயரிட்டுள்ளனர்.
மும்பையை சேர்ந்த பட நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. இதற்காக ஒரு வருடத்துக்கு மேலாக ஜெயலலிதா பற்றிய தகவல்களை சேகரித்து இருக்கிறார்கள்.
இதுகுறித்து, இந்த படத்தை தயாரிக்க இருக்கும் ஆதித்யா பரத்வாஜ் கூறியதாவது:-
ஜெயலலிதா உயிருடன் இருந்தபோதே அவரிடம் இதுபற்றி தெரிவித்தோம். ஆனால் அவர் இதுகுறித்து பிறகு பேசலாம் என்று சொன்னார்.
‘புரட்சி தலைவி’ படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு மும்பையில் உள்ள ஸ்டுடியோக்களில் நடைபெறும். ஆரம்பகால திரைப்பட வாழ்க்கை பற்றிய படப்பிடிப்பு சென்னையில் படமாகும். அகமதாபாத்திலும் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளோம்.
ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிப்பது யார்? மற்ற கதாபாத்திரங்களில் நடிப்பவர்கள் யார்? தொழில்நுட்ப கலைஞர்கள் யார்? என்பது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.
இந்த படத்தில் ஜெயலலிதாவின் ஆரம்பகால திரையுலக வாழ்க்கை, அரசியல் சாதனை மற்றும் முக்கிய சம்பவங்கள் இடம்பெறும். இதற்கான திரைக்கதை தயாராகி வருகிறது. ஜனவரி கடைசி வாரத்தில் ‘புரட்சித் தலைவி’ படப்பிடிப்பு தொடங்கும். இவ்வாறு அவர் கூறினார்.