ஜெயம் ரவி நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘டிக் டிக் டிக்’. சக்தி சௌந்தர் ராஜன் இயக்கியுள்ள இப்படத்தில் ஜெயம் ரவியின் மகன் ஆரவ் ரவி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இமான் இசையமைத்துள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது.
இதில் ஜெயம் ரவி பேசும் போது, ‘முதலில் நான் ஸ்பேஸ் திரில்லர் படத்தில் நடிக்கிறேன் என்ற சொன்னவுடன் யாருக்கும் நம்பிக்கையில்லை. அதிலும் மிருதன் இயக்குநரின் இயக்கத்தில் நடிக்கிறேன் என்று சொன்ன பிறகும் யாரும் நம்பவில்லை. இருபது வருடத்திற்கு முன் தண்ணீரை விற்கபோகிறேன் என்று சொல்லியிருந்தால் யாரும் நம்பியிருக்கமாட்டார்கள். பிறகு நல்லபடம் எடுத்தால் நாங்கள் பார்ப்போம் என்று ரசிகர்கள் வைக்கும் நம்பிக்கையினால் தான் இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன்.
அதே போல் இந்த படத்தின் அரங்கத்தை முதலில் காட்டிய பிறகு தான் இப்படத்தின் மீது நம்பிக்கை அதிகரிக்க வைத்தது. அரங்கத்தின் அமைப்பே நான் உள்பட அனைத்து நடிகர்களின் பங்களிப்பை எளிதாக்கியது. ஏனெனில் ஸ்பேஸ் திரில்லர் என்று சொன்னவுடன் நடிகர்களுக்கு நடிக்கும் போது தயக்கம் இருக்கும். குழப்பம் இருக்கும். கேள்வி இருக்கும். ஆனால் இந்த படத்திற்காக போடப்பட்ட அரங்கத்தில் உண்மையான விண்வெளி ஆய்வகத்திற்கான உள்ளரங்க அமைப்பு சிறப்பாக இடம்பெற்றிருந்தது. இதற்காக கலை இயக்குநரை மனதாக பாராட்டலாம்.
இந்த படம் இரண்டு மணி நேரம் பத்து நிமிட அளவிற்கு அற்புதமாக படத்தை எடிட் செய்திருக்கிறார் எடிட்டர். இதற்காக அவருக்கும் பாராட்டு தெரிவிக்கிறேன்.
இந்த படத்தின் மூலம் என்னுடைய மகன் ஆரவ் அறிமுகமாகியிருக்கிறார். அவரிடம் ஒரு நாள் இயக்குநர் இது போல் ஒரு கேரக்டர் இருக்கிறது அதில் நடிக்கிறாயா? என கேட்டார் என்று சொன்னேன். ம் நடிக்கலாம் என்றான். அதற்கு டான்ஸ் தெரியவேண்டும் என்றேன். கத்துக்கலாம் என்றான் அவனுடைய இந்த ஆட்டிடியுட் படக்குழுவினரை கவர்ந்தது.
அதுபோல், படப்பிடிப்பு தளத்தில் நான் மட்டுமில்லை, எல்லோரும் நடிக்கும் காட்சியை மானிட்டரில் பார்த்துக் கொண்டே இருப்பான். ஒரு காட்சியில் நீங்கள் சரியா நடிக்க வில்லை. வசனம் மறந்து விட்டீர்கள் என்று கூறி இப்படி நடிங்க என்று கற்றுக் கொடுத்தான்’ என்றார்.