திரையுலகில் 25 ஆண்டு இசை பயணத்தை நினைவுகூரும் வகையில் சென்னையில் ஜனவரி 12-ம் தேதி ‘நேற்று இன்று நாளை’ என்னும் ஏ.ஆர். ரஹ்மான் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இந்த நிகழ்ச்சியை அறிமுகம் செய்யும் பத்திரிகையார்கள் சந்திப்பு நேற்று (வியாழக்கிழமை) சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின்போது செய்தியாளர்களின் சில கேள்விகளுக்கு ஏ.ஆர். ரஹ்மான பதிலளித்தார்.
ரஜினிகாந்த், விஷால், பிரகாஷ்ராஜ் என அரசியல் துறையில் நடிகர்கள் கால்பதிக்க தொடங்கியுள்ளது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த ரஹ்மான், மக்களுக்கு நல்லது செய்ய சரியான தலைமை இல்லை என அவர்கள் கருதி இருக்கலாம் என்று கூறினார்.
ரஜினிகாந்தின் ஆன்மிக அரசியல் தொடர்பாக உங்களது கருத்து என்ன? என்ற மற்றொரு வினாவுக்கு விடையளித்த அவர், மதச்சார்பற்ற ஆன்மிக அரசியல் என்று ரஜினிகாந்த் குறிப்பிட்டுள்ளார். அவரது எண்ணம் நல்லதாகவே இருக்கும் என நான் நினைக்கிறேன்.
அரசியலுக்கு வருபவர்கள் யாராக இருந்தாலும் மக்களின் தேவைகளை நிறைவேற்ற அவர்கள் உழைக்க வேண்டும். உள்கட்டமைப்பை மேம்படுத்துவது, விவசாயிகளின் வாழ்க்கை நிலையை உயர்த்துவது போன்ற விவகாரங்களில் உடனடியாக கவனம் செலுத்தப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.