சண்முக பாண்டியன் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘மதுரவீரன்’. இதில் இவருக்கு ஜோடியாக மீனாட்சி நடித்துள்ளார். இப்படத்தில் நடித்தது குறித்து அவர் கூறுகையில்,
‘நடிப்பை பற்றி பெரிதாக புரிதல் இல்லாத குடும்ப பின்னணியில் இருந்து வந்தவள் நான். என்னை மதுரவீரன் திரைப்படத்தின் கதாநாயகியாக தேர்ந்தெடுத்த இயக்குனர் பி.ஜி.முத்தையாவுக்கு நன்றி. இவர் படப்பிடிப்பு தளத்தில் எனக்கு பெரிதும் உதவினார். மிகவும் நல்ல மனிதர். எப்போதும் முகத்தில் புன்னகையுடன் இருப்பார். படப்பிடிப்பு தளத்துக்கு வரக்கூடிய முதல் நபரும் அவர் தான். அவருடைய உண்மையான உழைப்பும், அமைதியும் அனைவருக்கும் புத்துணர்ச்சியை தரும். அவர் படத்தின் ஒளிப்பதிவாளரா அல்லது இயக்குனரா? என்ற சந்தேகம் எனக்கு பலமுறை வந்துள்ளது. பன்முக திறமை கொண்டவர். அவரோடு இப்படத்தில் பணியாற்றியது சிறப்பாக இருந்தது.
சண்முகபாண்டியன் மிகவும் எளிமையானவர், மிகப்பெரிய குடும்பத்திலிருந்து வந்தாலும் எப்போதும் எல்லோரிடமும் சாதரணமாக பழகுபவர். அவர் மிகவும் நேர்மையானவர். படப்பிடிப்பில் வசனங்களை சரியாக பேச எனக்கு உதவினார். என்னுடைய வாழ்க்கையில் மிகச்சிறந்த தருணம் விஜயகாந்த் அவர்களும் பிரேமலதா அவர்களும் படப்பிடிப்பு தளத்துக்கு வந்து என்னுடன் 1 மணி நேரம் பேசியது தான். என்னுடைய வாழ்வில் எப்போதும் மறக்க முடியாத தருணம் அது எனலாம்.
என்னுடைய சொந்த ஊர் ஆலப்புழா, தமிழகத்தின் பசுமையான கிராமங்கள் என்னை அழகாக்கி, நிறைய கற்று தந்துள்ளது. கிராமத்து பெண்கள் சேலை அணிவதில் ஆரம்பித்து பலவற்றை எனக்கு கற்றுதந்துள்ளனர். கிராமத்து பெண்கள் சேலை அணிவது எனக்கு மிகவும் பிடிக்கும். மதுரவீரன் படத்தின் படப்பிடிப்பில் அவர்கள் எனக்கு மிகவும் உதவியாக இருந்தனர்’ என்றார்.