சமூக ஊடகமான ட்விட்டரில் இயங்குபவர்களை, அவர்களது ட்விட்டர் கணக்கில் பின் தொடர்வதற்கென போலியான தானியங்கி ட்விட்டர் கணக்குகளை தொடங்கி அதனை விற்ற நிறுவனத்தை விசாரிக்க அமெரிக்க நீதித் துறை உத்தரவிட்டுள்ளது.
திரை நட்சத்திரங்கள், அரசியல் விமர்சகர்கள், தொழிமுனைவோர்கள் தங்களை ட்விட்டரில் அதிகம் பேர் பின் தொடர்வதை விரும்புவார்கள். இவர்களை பின் தொடர்வதற்கென போலி தானியங்கி கணக்குகளை உண்டாக்கி அந்த கணக்குகளை அவர்களுக்கு விற்றுள்ளது அமெரிக்காவின் ஒரு நிறுவனம்.
இது குறித்து பேசிய நியூயார்க் அட்டர்னி ஜெனரல் எரிக், “ஆள்மாறாட்டம் மற்றும் மோசடி நியூயார்க் சட்டத்திற்கு விரோதமானது” என்றார்.
இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகி உள்ள நிறுவனத்தின் பெயர் `டேவுமி`.
ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை டேவுமி நிறுவனம் மறுத்துள்ளதாக நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
டேவுமி தனது இணையதளத்தில் ட்விட்டரில் பின் தொடர்பவர்கள் விற்பனைக்கு உள்ளதாக விளம்பரம் செய்துள்ளது. குறைந்தபட்ச விலை 12 டாலர்கள் எனவும் அதில் கூறி உள்ளது. அதுபோல, வாடிக்கையாளர்களுக்கு `லைக்ஸ் மற்றும் ரீடீவிட்` -களும் விற்பனைக்கு உள்ளதாக கூறி உள்ளது.
ட்விட்டர் மற்றும் அல்லாமல் பிற சமூக ஊடக கணக்குகளான பின்ட்ரஸ்ட், யுடியூப் ஆகியவற்றுக்கும் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கையை போலியாக உயர்த்தி உள்ளது.
ட்விட்டரில் அதிகமான பின் தொடர்பவர்களை வைத்துள்ள கணக்கு கருத்தியல் ரீதியாக ஆதிக்கம் செலுத்த முடியும். அதுபோல, அந்த கணக்குகளை இடப்படும் இடுகைகள் அதிக பலன்களை கொண்டு வந்து சேர்க்கும்.
டேவுமி நிறுவனம் நியூயார்க்கில் பதிவுபெற்ற நிறுவனம் என்றாலும், அதன் ஊழியர்கள் செயல்படுவது ஃபிலிப்பைன்ஸ் தேசத்திலிருந்து என்கிறது நியூயார்க் டைம்ஸ் நாளிதழ்.
கடந்த காலங்களில், இது போன்ற நிறுவனங்கள் மீது உறுதியான நடவடிக்கையை ட்விட்டர் நிறுவனம் எடுக்கவில்லை என்று அதன் மீது குற்றச்சாட்டு உள்ளது.
இந்த சூழ்நிலையில் டேவுமி மற்றும் இதுபோல செயல்படும் நிறுவனங்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று ட்விட்டர் நிறுவனம் கூறி உள்ளது.
ட்விட்டர் பகிர்ந்துள்ள ஒரு ட்விட்டில், டேவுமி மற்றும் அதுபோல செயல்படும் நிறுவனங்களின் தந்திரங்கள் எங்களது கொள்கைக்கு எதிரானது. அவர்களை தடுத்து நிறுத்த தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி உள்ளது.