மணல் என்ற உடன் நம் நினைவுக்கு வருவது கடற்கரைகள்தான். எனினும், தினம்தோறும் வாழ்ந்து வரும் வாழ்க்கையில் நாம் அதிகம் பார்ப்பது மணல். நம் வீட்டு சுவர்களில், நம் சமையலறையில் இருக்கும் கண்ணாடி பாட்டில்களில், நம் கார் டயர்கள் வரை அனைத்திலும் மணல் உள்ளது.
இவ்வுலகில் நீருக்கு அடுத்து நாம் அதிகம் பயன்படுத்தும் வளம் மணல். இந்நிலையில், இந்த உலகம் மணல் பற்றாக்குறையை சந்திக்கும் வாய்ப்புள்ளதாக ஐ.நா கூறுகிறது.
ஆகவே, மணலை நாம் பார்த்து பயன்படுத்த வேண்டும். ஏன்?
மணல் உருவாக ஆயிரம் வருடங்களுக்கு மேலாகும். மலைகளில் அறிக்கப்பட்ட பாறைகள், முடிவாக மணல் திட்டுகளாகி கடற்பகுதி மற்றும் கடற்கரைகளில் போய் குவியும். இதனை நாம் அளவுக்கு அதிகமாக பயன்படுத்துகிறோமே தவிர, அது எங்கிருந்து வருகிறது என யாரும் யோசிப்பதில்லை.
நாம் வாழும் சமுதாயத்தின் அஸ்திவாரமே மணல்தான். இந்த நவீன உலகத்தில், கட்டட வேலைகளுக்கு மட்டும் ஆண்டுக்கு 15 பில்லியன் டன் மணல் பயன்படுத்தப்படுகிறதாக கூறப்படுகிறது.
ஆறுகள் மற்றும் கடற்கரையில் இருந்து அதிக அளவில் மணல் அள்ளப்படுவதால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் வாய்ப்பும் உள்ளது. ஆறுகள் மற்றும் கடற்கரைகள் மென்மையான சமச்சீர் சுற்றுச்சூழல் கொண்டவை. இங்கு அதிகளவில் மணல் அள்ளப்படும் போது அதன் சமநிலை பாதிக்கப்படுகிறது.
ஆற்றங்கரை ஓரங்களில் மணலில் உள்ள கரிம பொருட்கள்தான் சிறிய மீன்களின் உணவு. பெரிய மீன்கள் சிறிய மீன்களை உண்ணும்.
அதிக அளவில் மணல் அள்ளுவதால், மீன்களும் மீன்வளமும் பாதிக்கப்படுகிறது. இதனால் மீனவர்களின் வாழ்வும் பாதிக்கப்படுகிறது.
உலகில் மணல் தட்டுப்பாடு அதிகரித்து வர, கடற்கரை மற்றும் ஆற்றங்கரை ஓரங்களில் மணல் அள்ளுவதும் அதிகரித்து வருகிறது. இதனால் மணல் வழங்கும் இயற்கை பாதுகாப்பும் குறைந்து வருகிறது.
மணல் இல்லாததால் கடல் அலைகளால் நிலங்கள் அரிக்கப்படுகின்றன. கடற்கரை அருகில் உள்ள வீடுகளிலும், விவசாய நிவங்களிலும் வெள்ளம் ஏற்பட்டு, அவை சேதமடைகின்றன.
கட்டுமான பணிகளுக்காக சில நாடுகளில் சட்டவிரோதமாக அதிகளவில் மணல் அள்ளப்படுகிறது. மணல் அள்ள தடை விதிக்கப்பட்ட பகுதிகளில் வன்முறை, லஞ்சம் அல்லது அதிகாரிகளை மிரட்டி சில மணல் மாஃபியாக்கள் சட்டவிரோதமாக செயல்பட்டு வருகின்றன. கரிபியனில் இருந்து கம்போடியா வரை உலகம் முழுவதும் இது நடைபெறுகிறது.