மைசூரு பாராளுமன்ற தொகுதி பா.ஜனதா எம்.பி. பிரதாப் சிம்ஹா. இவர் கடந்த ஆண்டு, பிரபல நடிகர் பிரகாஷ் ராஜ் குறித்து டுவிட்டரில் ஒரு அவதூறான கருத்தை பதிவிட்டார். அதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த நடிகர் பிரகாஷ் ராஜ், உடனடியாக அதுபற்றி விளக்கம் கேட்டு பிரதாப் சிம்ஹாவுக்கு நோட்டீஸ் அனுப்பினார்.
ஆனால் அந்த நோட்டீசுக்கு பிரதாப் சிம்ஹா இதுவரையில் எந்தவித பதிலும் அனுப்பவில்லை என்று தெரிகிறது. இதையடுத்து நேற்று மைசூரு கோர்ட்டில் நடிகர் பிரகாஷ் ராஜ், பிரதாப் சிம்ஹா எம்.பி. மீது மானநஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார்.
அதில் தன்னைப்பற்றி அவதூறான கருத்தை பதிவிட்ட பிரதாப் சிம்ஹா உடனடியாக அதுபற்றி விளக்கம் அளிக்க வேண்டும், மேலும் தனக்கு நஷ்ட ஈடாக ஒரு ரூபாய் மட்டும் வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர இருக்கிறது.