திருமணங்களுக்கு புகைப்படம் எடுக்கும் புகைப்படக்காரரின் புகைப்படங்கள் குறித்து தொடர்ந்து அவதூறாக பேசியதற்காக மணப்பெண்ணிற்கு 1.15லட்சம் டாலர்கள் அபராதமாக விதித்துள்ளது நீதிமன்றம்.
அப்படி என்ன அவதூறு பேசினார் அந்த மணப்பெண்?
கனடாவை சேர்ந்த மணப்பெண்ணான எமிலி லியாவ், கிட்டத்தட்ட ஒரு ஆண்டுகளாக, தனது திருமண புகைப்படத்தை எடுத்த அமரா வெட்டிங் என்ற நிறுவனத்தின் புகைப்படங்களை இகழ்ந்து தள்ளினார்.
தனது திருமணத்திற்கு முன்பு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் திருப்திகரமாக இல்லை என்றுள்ளார் எமிலி.
புகைப்பட கலைஞர் எடுத்த படங்களை இழிவாக பேசினார்.
இந்த நிறுவனத்தின் உரிமையாளரின் மரியாதையை `தன்னால் ஆன எல்லாவற்றையும் கொண்டு அப்பெண்மணி தாக்கியுள்ளார் என்றும், ஒருவரை தாக்க வேண்டும் என்று அவர் உந்தப்பட்டிருந்தார் என்பதையும் நீதிபதி கண்டறிந்துள்ளார்.
தனது திருமணத்திற்கு முன்பு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் திருப்திகரமாக இல்லை என்றுள்ளார் எமிலி.
அவர் சரியான முறையில் நடத்தப்படாததாக உணர்ந்ததாகவும் கூறியுள்ளார்.
பிரிட்டிஷ் கொலம்பியாவின் உச்சநீதிமன்ற நீதிபதியான கார்டன் வெதரில், 22ஆம் தேதி பிப்ரவரி மாதம் அளித்த தீர்ப்பில், `அந்த பெண்மணி, தனக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் அந்த படங்கள் இல்லை என்பதை நிரூபிக்க தவறிவிட்டார்` என்றார்.
எமிலி தனது இணையதள `வெறுப்பு` பிரசாரத்தை தொடங்கிய பிறகு, அமரா வெட்டிங் நிறுவனத்தின் வணிகம் சரிந்தது என்பது தற்செயலான ஒரு விஷயமாக இல்லை என்றார்.
அந்நிறுவனம் தனது வணிகத்தை ஜனவரி 2017இல் மூடியது.
நீதிமன்ற ஆவணங்களின் அடிப்படையில், அமரா வெட்டிங் நிறுவனத்தையும், அதன் உரிமையாளரான கிட்டி சானையும், எமிலி `வலை விரிப்பவர், வாடிக்கையாளர்களிடம் பொய் கூறுபவர்` என்றெல்லாம் குறிப்பிட்டு ஆங்கிலம் மற்றும் சீன மொழிகளை அடிப்படையாக கொண்ட தளங்களிலும் பல பதிவுகளை எழுதியுள்ளார் என தெரிகிறது.
அமரா வெட்டிங் நிறுவனத்தின் தொழில்முறை பகுதிநேர புகைப்படக்காரர், எமிலியின் `திருமணங்களுக்கு முன்பான` புகைப்படங்களை எடுத்தபோதுதான், பிரச்சனை தொடங்கியது.
நீதிமன்ற ஆவணங்களின்படி, அப்பெண்ணும், அவரின் தற்போதைய கணவரும், அந்நிறுவனத்திற்கு அளிக்கவேண்டிய மீதித் தொகையை அளிக்காமல் நிறுத்தி வைத்துள்ளனர்.
ஆனால், அந்த தம்பதிகளின் ஒப்பந்தத்தில் தெரிவித்தபடி, அமரா நிறுவனம் தெரிவித்திருந்தபடி, தம்பதிகளுக்கான சிகை அலங்காரம், முடி, புகைப்படம், பூக்கள் என அனைத்து சேவைகளையும் செய்துள்ளது.
நீதிமன்ற ஆவணங்களின்படி, திருமண நிகழ்விற்கு பிறகு, தங்களுக்கு அளிக்கப்பட வேண்டிய தொகை அளிக்கப்படவில்லை என்றால், எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தயாரிக்கப்பட மாட்டாது என்று சான் கூறியதாக உள்ளது.
அதற்கு மீதமுள்ள தொகையை அவர்கள் அளிக்க மறுத்துள்ளனர் என்று ஆவணம் குறிப்பிடுகிறது.
அவர்கள் ஏற்கனவே அளித்த பணத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை திருப்பி அளித்து இந்த ஒப்பந்தத்தை முடித்துக்கொள்ளலாம் என்று சான் கேட்டதாகவும், அதற்கு அந்த தம்பதி மறுத்துள்ளதாக நீதிமன்ற ஆவணங்கள் கூறுகின்றன.
மேலும், இந்த பிரச்சனையை தொடர்ந்து, `சிறிய தொகையை பெறுவதற்காக` கடந்த 2015ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் நீதிமன்றத்திற்கு எடுத்து சென்றனர் அத்தம்பதியினர். அப்போது தனக்கு அளிக்கப்பட வேண்டிய மீதி தொகையை கேட்டார் சான்.
ஆகஸ்ட் மாதம் முதல், தங்களுக்கு அமரா வெட்டிங் செய்த சேவை சரியானதாக இல்லை என்று, அவதூறான கருத்துகளை இணையதளத்தில் எழுதத் தொடங்கினார் எமிலி.
இந்த சிறிய தொகையை பெறுவதற்காக தம்பதி போட்ட வழக்கை தள்ளுபடி செய்தது நீதிமன்றம், இதனால், சான் தனக்கான தொகையை பெறுவதில் வெற்றிபெற்றார்.
ஒரு வாரத்திற்கு பிறகு, பேஸ்புக், வீபோ மற்றும் இதர சமூக வலைதளங்களில் மன்னிப்பு கோரினார் எமிலி.
ஆனால், தங்களின் வணிகத்திற்கு ஏற்பட வேண்டிய அனைத்து பாதிப்புகளும் ஏற்கனவே நடந்துவிட்டது என்று சி.பி.சி தொலைக்காட்சியிடம், கிட்டி சான் தெரிவித்துள்ளார்.
`நான் இழந்தவை எல்லாம் இழந்துவிட்டேன். அதை எவற்றாலும் ஈடுசெய்ய முடியாது` என்று அவர் தெரிவித்துள்ளார்.
`இணைதளத்தில் ஒரு கருத்தை மக்கள் கூறினால், அதற்கான விளைவை அவர்கள் சந்திக்க வேண்டும் என்று நான் நிரூபிக்க விரும்பினேன்` என்று தெரிவித்துள்ளார்.