அன்னக்கிளி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக தடம்பதித்தவர் இளையராஜா(74). இதுவரை பல்வேறு இந்திய மொழிகளில் ஆயிரத்துக்கும் அதிகமான படங்களுக்கு இசை அமைத்து சுமார் 7 ஆயிரம் பாடல்களை வழங்கியுள்ள இளையராஜா, சிம்பொனி இசையிலும் தனது சாதனையை பதிவு செய்துள்ளார்.
சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதினை ஐந்து முறை பெற்றுள்ள இவர், உலகின் பல்வேறு நாடுகளில் அவ்வப்போது இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். அவ்வகையில், அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் முதன்முறையாக இசை நிகழ்ச்சி நடத்தியுள்ளார்.
ஹங்கேரி நாட்டை சேர்ந்த சிம்பொனி 85 இசைக் கலைஞர்களை கொண்ட குழுவுடன், இந்தியாவை சேர்ந்த பிரபல இசைக் கலைஞர்களும் ’ராஜா-தி ஒன் மேன்’ என்ற இந்த இசை நிகழ்ச்சியின் மூலம் சுமார் 4 ஆயிரம் பார்வையாளர்களின் செவிகளுக்கு இசை விருந்து அளித்தனர்.
பிரபல பின்னணி பாடகர்களான சித்ரா, மனோ, ஹரிச்சரண், ராகுல் நம்பியார், சரத், சந்தோஷ் உள்ளிட்டோர் தங்களது குரல் வளத்தால் ரசிகர்களை மகிழ்வித்தனர்.
முன்னதாக, ரசிகர்கள் முன்னர் உரையாற்றிய இளையராஜா, முதன்முறையாக ஹூஸ்டனில் நிகழ்ச்சி நடத்தும் வாய்ப்பு கிடைத்தமைக்காக பெருமகிழ்ச்சி கொள்வதாக தெரிவித்தார். உலகிலேயே முற்றிலுமாக ஆரோகணத்தில் (ஸ,ரி,க,ம,ப,த,னி,ஸ என்னும் சப்தஸ்வரங்களின் சுருதியில் முறையே உயர்ந்து கொண்டே போகும் சுரங்களையுடைய) ஒரு பாடலுக்கு நான் ஒருவன் தான் இசை அமைத்துள்ளேன்.
1970-ம் ஆண்டில் வெளியான பாடல்களில் தொடங்கி சமீபகால பாடல்கள் வரையில் உங்களுக்காக அளிக்கப் போகிறேன் என்றும் அவர் குறிப்பிட்டார்.
குறிப்பாக, ‘அக்னி நட்சத்திரம்’ படத்தில் இடம்பெறும் ‘நின்னுக்கோரி வர்ணம்’ பாடலை சித்ரா பாடியபோதும், தனது தனித்தன்மை வாய்ந்த ‘சூப்பர் ஹிட்’ பாடல்களை மனோ பாடியபோதும் ரசிகர்கள் உற்சாக மிகுதியால் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.
இந்த இசை பயணத்தில் ஹூஸ்டனை தொடர்ந்து டல்லாஸ், சான் ஜோஸ், கனெக்ட்டிகட் மற்றும் டொராண்ட்டோ நகரங்களிலும் ’ராஜா-தி ஒன் மேன்’ இசை நிகழ்ச்சிகளை இளையராஜா நடத்தவுள்ளார்.