‘மாப்பிள்ளை’ படத்தின் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானவர் ஹன்சிகா. இப்படத்தை தொடர்ந்து ‘எங்கேயும் காதல்’, ‘வேலாயுதம்’, ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’, ‘சிங்கம் 2’, ‘ஆம்பள’, ‘குலேபகாவலி’ உள்ளிட்ட பல தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார்.
ஜெயம் ரவி, தனுஷ், விஜய், உதயநிதி ஸ்டாலின், ஆர்யா, சித்தார்த், சூர்யா, கார்த்தி, சிவகார்த்திகேயன், விஷால், சிம்பு, பிரபுதேவா என தமிழின் முன்னணி மற்றும் இளம் நடிகர்கள் பெரும்பாலானோருடன் ஜோடியாக நடித்துவிட்டார்.
மணிரத்னத்தின் உதவியாளர் தினேஷ் செல்வராஜ் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடித்துவரும் ‘துப்பாக்கி முனை’ மற்றும் சாம் ஆண்டன் இயக்கத்தில் அதர்வா நடிக்கும் படம் ஆகியவற்றில் தற்போது நடித்து வருகிறார் ஹன்சிகா.
இந்நிலையில், அவரிடம் மேனேஜராகப் பணிபுரிந்த முனுசாமி என்பவர் தென்னிந்திய நடிகர் சங்கத்தில் புகார் அளித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில், இதுவரை தான் பணியாற்றியதற்கான சம்பளத்தை ஹன்சிகா வழங்கவில்லை என்றும், அதைப் பெற்றுத் தரும்படியும் கூறியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
சிம்ரன், மாளவிகா உள்பட சில தமிழ் நடிகைகளுக்கு மேனேஜராக இருந்திருக்கிறார் முனுசாமி.