உலகிலேயே அதிக மக்கள் தொகையைக் கொண்ட நாடாக சீனா திகழ்கிறது. 2013-ம் ஆண்டு நிலவரப்படி, சீனாவின் மக்கள் தொகை 135 கோடி ஆகும். அங்கு ‘ஒரு தம்பதி, ஒரு குழந்தை’ என்ற கொள்கை பின்பற்றப்பட்டு வருகிறது.
ஆனால் 29 மாகாணங்கள் இந்த கொள்கையை சற்றே தளர்த்தி உள்ளன. அங்கு கணவர், மனைவி இருவரில் ஒருவர் அவர்களது பெற்றோருக்கு ஒரே குழந்தையாக இருந்தால், அந்த தம்பதியர் இரண்டாவது குழந்தையை பெற்றெடுத்துக் கொள்ளலாம்.
இதே போன்று சிறுபான்மையினருக்கு, ‘ஒரு தம்பதியர், ஒரு குழந்தை’ கொள்கை பொருந்தாது.
இந்த நிலையில், மக்கள் தொகை பிரச்சினையில் ‘சோஹூ’ என்ற செய்தி இணைய தளம், அங்கு ஆன்லைன் சர்வே ஒன்றை நடத்தியது. இந்த சர்வேயில் கலந்து கொண்டவர்களில் 95 சதவீதம் பேர் அனைத்து தம்பதியரும் 2 குழந்தை பெற்றுக்கொள்ள ஆதரவு தெரிவித்துள்ளனர். ஆனால் 36 சதவீதம் பேர்தான் 2 குழந்தை பெற்றுக்கொள்வோம் என்று கூறி உள்ளனர்.
இரண்டாவது குழந்தை பெற்றுக்கொள்ள விருப்பம் இல்லை என்று கூறுகிற தம்பதியர் அதற்கு 4 முக்கிய காரணங்களை கூறுகின்றனர். அவை, பொருளாதார நெருக்கடி, வயது அதிகரித்து வருதல், 2 குழந்தைகளை வளர்ப்பது சிரமம், குழந்தைகளை தரமான சூழலில் வளர்ப்பதற்கு போதுமான நிதி ஆதாரங்கள் இல்லாமை ஆகும்.
ஆனாலும் எல்லா தம்பதியரும் 2 குழந்தைகள் பெற்றுக்கொள்ள அனுமதிப்பது பற்றி அரசு தீவிரமாக பரிசீலித்து வருவதாக தகவல்கள் கூறுகின்றன. இதுபற்றி, பீஜிங் பல்கலைக்கழக மக்கள் தொகையியல் பேராசிரியர் லு ஜிஹூவா கூறும்போது, “தேசிய சுகாதாரம் மற்றும் குடும்ப கட்டுப்பாடு கமிஷன் எதிர்காலத்தில் ஒரு தம்பதியர், ஒரு குழந்தை என்ற கொள்கையை மாற்றி அமைக்க வாய்ப்பு இருக்கிறது. இந்த ஆண்டு அதை அமல்படுத்த வாய்ப்பு குறைவு. ஆனால் அடுத்த ஆண்டு அமல்படுத்தப்படலாம் அல்லது சீனாவின் 13-வது ஐந்தாண்டு திட்ட தொடக்கத்தில் அமல்படுத்தலாம்” என கூறினார்.
மேலும் அவர் கூறுகையில், “2-வது குழந்தை பெற்றுக்கொள்ள அனுமதி அளிப்பது மட்டுமல்ல, அது தொடர்பான அனைத்து கொள்கைகள், ஒழுங்குமுறைகள், நடைமுறைகள், வசதிகள் அனைத்திலும் தேவையான மாற்றங்கள் செய்து முடிக்கப்படவேண்டி உள்ளது. இதற்கு கொஞ்சம் அவகாசம் தேவைப்படும்” என்றார்.
இது தொடர்பாக வல்லுனர்கள் கருத்து தெரிவிக்கையில், “அனைத்து தம்பதியரும் 2-வது குழந்தை பெற்றுக்கொள்ள அவசரமாக அனுமதி அளிக்க வேண்டும். இதனால்தான் வயது முதிர்ச்சியால் சமூகத்தில் ஏற்படுகிற தாக்கத்தை குறைக்க முடியும்” என்கிறார்கள்.
பீஜிங் பல்கலைக்கழகத்தின் மக்கள் தொகை ஆராய்ச்சி நிறுவனத்தின் பேராசிரியர் மு குவாங்ஸாங், “ஒரு தம்பதிக்கு ஒரு குழந்தை என்கிற கொள்கையை தளர்த்த வேண்டும் என்பதுதான் மக்களின் எதிர்பார்ப்பாக அமைந்துள்ளது. ஆரோக்கியமான, நிலைத்து நிற்கக்கூடிய வளர்ச்சிக்கு மிதமான குழந்தை பிறப்பு வீதம், நாட்டுக்கு அவசியம் தேவை” என கூறினார்.
சீனா தொடர்ந்து 3-வது ஆண்டாக தொழிலாளர்கள் எண்ணிக்கை முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 37 லட்சம் குறைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.