சமீபகாலமாக நடிகைகளின் ஆபாச புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. ஹன்சிகாவின் குளியலறை காட்சிகளும், ராதிகா ஆப்தே, ஸ்ரீதிவ்யா, வசுந்தராவின் ஆபாச செல்பி புகைப்படங்களும் இணைய தளங்களில் பரவியது. இது போலி புகைப்படங்கள் என்று நடிகைகள் மறுத்தனர்.
இந்நிலையில் பிரபல மலையாள நடிகையும், ‘பாபநாசம்’ படத்தில் ஐ.ஜி.யாக நடித்த ஆஷா சரத்தின் புகைப்படமும் வாட்ஸ் அப் மற்றும் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
ஆஷா சரத் மலையாளத்தில் வெளியான ‘திரிஷ்யம்’ படத்தின் மூலம் கேரளாவில் பிரபலமானவர். தமிழில் ‘பாபநாசம்’ படத்தில் அதே ஐ.ஜி. கேரக்டரில் நடித்து தமிழகத்திலும் பல ரசிகர்களை தனக்கென உருவாக்கிவிட்டார். 44 வயதான ஆஷா சரத்திற்கு திருமணமாகி கணவரும், இரண்டு பெண் குழந்தைகளும் இருக்கிறார்கள்.
ஆபாச புகைப்படங்கள் வெளியானதை அறிந்த ஆஷா சரத் மிகவும் அதிர்ச்சியாகியிருக்கிறார். மேலும் மற்றவர்களை போல கண்டு கொள்ளாமல் கொச்சி போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளார்.
இது குறித்து ஆஷா சரத் கூறும்போது, “சில நாட்களுக்கு முன்னால் எனது முகம் தாங்கிய ஆபாச புகைப்படங்களை இணையத்தில் பார்க்க நேர்ந்த்து. மிகுந்த அதிர்ச்சியடைந்தேன். இது போன்ற தருணங்களில் பெண்கள் அடக்கமாக அமைதியாக ஒதுங்கிப் போய்விடுவார்கள் என்று நினைத்துதான் இப்படி சிலர் இதனை செய்திருக்கிறார்கள் என்பதை உணர்ந்தேன்.
இதை இப்படியே விட எனக்கு மனமில்லை. கொச்சி போலீஸ் கமிஷனரிடம் இன்றைக்கு இது குறித்து புகார் செய்திருக்கிறேன். அவர்களும் உடனேயே எனது புகாரை ஏற்றுக் கொண்டு சைபர் கிரைம் போலீஸ் மூலமாக விசாரித்து வருகிறார்கள்.
மிக விரைவில் அந்த அயோக்கியர்கள் பிடிபட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்று உறுதியுடன் நம்புகிறேன். இவர்களை போன்று பெண்களை அவமதிப்பு செய்பவர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட்டே ஆக வேண்டும். இந்த வழக்கில் அத்தகைய முடிவுக்கு வரும்வரையில் நான் போராடுவது என்று முடிவு செய்திருக்கிறேன். நான் ஒருபோதும் இதிலிருந்து பின் வாங்க மாட்டேன்’’ என்றார்.