கனடாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் குடும்பத்தில் நிகழ்ந்த திருமண ஊர்வலத்தில் போதை தலைக்கேறிய குதிரை மணமகனை தூக்கிப் பந்தாடிய காட்சி காண்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இங்குள்ள பிரிட்டிஷ் கொலம்பியா பகுதியில் இருக்கும் சுர்ரே நகரை சேர்ந்த ஒரு சீக்கியர் குடும்பத்தின் திருமண நிகழ்ச்சி கடந்த வாரம் நடைபெற்றது. சீக்கிய சம்பிரதாயப்படி, ராஜா காலத்து காலணி, பைஜாமா, ஷர்வானி, தலைப்பாகை, உடைவாள் சகிதமாக மணமகன் குதிரை மீது ஏறினார்.
அவர் ஏறி அமர்ந்தவுடன் மிரட்சியடைந்த குதிரை, கணைத்தபடி, முன்னங்கால்களை தூக்கி முரண்டு பிடித்தது. மாப்பிள்ளையின் உடைவாள் குதிரையின் மீது பட்டிருக்கும். அதனால், குதிரை வலியால் இப்படி செய்கிறது என்று ஊர்வல குதிரையின் உரிமையாளர் நினைத்தார்.
ஆனால், அடுத்த சில நிமிடங்களில் திருமண ஊர்வலம் வன்முறைக்களமாக மாறும் என்று அவர் எதிர்பார்க்கவில்லை. பயங்கரமாக கணைத்தபடி மீண்டும் முன்னங்காலை தூக்கி, சில நூறடி தூரம் ஓடத்தொடங்கிய குதிரை, ஒரு சிலிர்ப்பு சிலிர்த்து தனது முதுகின் மீது அமர்ந்திருந்த மணமகனை தலைகுப்புற தரையில் உருட்டி விட்டது.
தலைப்பாகை கழன்று, அந்த மணமகன் கீழே விழுந்த காட்சி தற்போது ‘யூடியூப்’ வழியாக கசிந்துள்ளது. அந்த குதிரைக்கு யாரோ போதைப்பொருள் தருவது போன்ற வீடியோ பதிவு கண்டுபிடிக்கப்பட்டதாக இச்சம்பவத்துக்கு பின்னர் வந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
சீக்கிய மணமகனை குப்புறத்தள்ளிய அந்த குதிரையின் ஆவேசத்தை இந்த வீடியோவில் காணலாம்..,