காவிரி விவகாரம் தொடர்பாக தமிழகம் முழுவதும் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், நேற்று நடிகர் சங்கம் சார்பில் மவுன போராட்டம் நடத்தப்பட்டது.
இந்நிலையில், இயக்குநர் பாரதிராஜா, ஆர்.கே.செல்வமணி, நடிகர் சத்யராஜ், இயக்குநர் அமீர், இயக்குநர் வ.கவுதமன் உள்ளிட்டவர்கள் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய பாரதிராஜா,
தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பேரவை தொடங்கியிருப்பதாக இயக்குநர் பாரதிராஜா அறிவித்துள்ளார். தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பேரவைக்கு எந்த அரசியல் அடையாளமும் கிடையாது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க, அரசியல் சாயத்தை கலைத்துவிட்டு தமிழனாக ஒன்று கூடுங்கள். ஐபிஎல் போட்டியை தள்ளி வைப்பதில் சட்ட சிக்கல் இருப்பதாக முதலமைச்சர் கூறினார். ஐபிஎல் போட்டியை எதிர்த்து போராட்டம் நடத்தப்படும். காவிரி போராட்டத்தை திசைத்திருப்பவே ஐபிஎல் போட்டிகள் நடத்தப்படுகிறதோ என்ற ஐயம் உள்ளது என்றார்.
நடிகர் சத்யராஜ் பேசும் போது, நடிகர்கள் களத்தில் இறங்கி போராட முடியாது, அரசியல்வாதிகள் ஒருங்கிணைந்து போராட வேண்டும். எனக்கு அரசியல் ஆர்வம் இல்லை, ஆனால் தமிழகத்தில் வாழும் மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுப்பேன். தமிழிசை என்னை பார்த்து பயப்படவேண்டிய அவசியம் இல்லை, என்னிடம் அரசியல் சார்ந்த திட்டங்கள் எதுவும் இல்லை. காவிரி பிரச்னை தற்போது சூடுபிடித்துள்ள நிலையில், தமிழகத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்த வேண்டாம். போராட்ட மன நிலையில் உள்ள இளைஞர்களை ஐபிஎல் மூலம் திசைதிருப்ப முயற்சி நடக்கிறது என்றார்.
ஆர்.கே.செல்வமணி பேசுகையில், தேசிய கட்சிகள் ஆட்சியமைக்க முடியாததால், தமிழகத்தை குப்பைக் கிடங்காக மாற்றிவிட்டனர். ஐபிஎல் போட்டியை ஒரு மணி நேரம் நிறுத்தினால், தமிழர்களின் ஒற்றுமை உலகம் முழுக்க தெரிய வரும். சூதாட்டம் ஆடியதாக சென்னை அணிக்கு 2 ஆண்டுகள் தடை விதித்த போது சென்னைக்கு உங்கள் ஆதரவு இருக்குமென்றால், விவசாயிகளுக்கு இருக்காதா என்று ஆர்.கே. செல்வமணி கேள்வி எழுப்பினார்.