பட அதிபர்கள் கடந்த மாதம் 1-ந்தேதியில் இருந்து புதிய படங்கள் வெளியீட்டை நிறுத்தி வைத்துள்ளனர். கோடை விடுமுறை, படங்களுக்கு நல்ல வசூல் காலம். மாணவர்கள் கூட்டம் கூட்டமாக தியேட்டர்களை மொய்ப்பது உண்டு. இதனால் பெரிய நடிகர்கள் கோடையில் தங்கள் படங்களை வெளியிட விரும்புவார்கள்.
இந்த கோடையில் வாரத்துக்கு 5, 6 படங்கள் என்று 30-க்கும் மேற்பட்ட படங்களை திரைக்கு கொண்டு வர தயாரிப்பாளர்கள் திட்டமிட்டு இருந்தனர். ஸ்டிரைக்கால் அந்த படங்கள் முடங்கி உள்ளன. ஒவ்வொரு வருடமும் தமிழ் புத்தாண்டு தினத்தில் பெரிய படங்கள் வரும். வேலை நிறுத்தம் முடிவுக்கு வராததால் 14-ந் தேதி தமிழ் புத்தாண்டில் புதிய படங்கள் வெளியாவது கேள்விக்குறியாகி உள்ளது.
இந்த மாத இறுதியில் ரஜினிகாந்தின் காலா படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்காக அவசரமாக தணிக்கையையும் முடித்து விட்டனர். ஸ்டிரைக் முடிந்தால் காலா வெளியாகும் என்றும் இல்லாவிட்டால் மீண்டும் தள்ளிப்போகும் என்றும் கூறப்படுகிறது.