சர்வதேச அரங்கில் தமிழ் சினிமாவை தலை நிமிரச் செய்த இயக்குனர்களில் ஒருவரான வெற்றி மாறனின் இயக்கத்தில் விரைவில் திரைக்கு வரவிருக்கும் படம் ‘விசாரணை’. ஆட்டோ சந்திரகுமார் என்பவர், தனது வாழ்க்கையில் ஏற்பட்ட ‘லாக்-அப்’ அனுபவங்களை மையமாக வைத்து எழுதிய ‘லாக்-அப்’ என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு, இந்தப் படத்தை உருவாக்கியுள்ளார் வெற்றி மாறன்.
விசாரணை என்ற பெயரில் காவல் நிலையத்தில் அரங்கேறும் அராஜகங்கள் குறித்து பேசும் இந்தப் படத்தில் அட்டக்கத்தி தினேஷ், முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மேலும் சமுத்திரக்கனி, கிஷோர், முருகதாஸ் ஆகியோரும் இதில் நடித்துள்ளனர். நடிகர் தனுஷ் தயாரிக்க, ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்க, ராமலிங்கத்தின் ஒளிப்பதிவில் படம் ரிலீசுக்காக காத்திருக்கிறது.
இந்நிலையில், சர்வதேச இயக்குனர்களின் சங்கமமாகத் திகழும் புகழ்பெற்ற வெனிஸ் திரைப்பட விழாவின் போட்டி பிரிவில் பங்கேற்கும் முதல் தமிழ்ப்படம் என்கிற பெருமையை ‘விசாரணை’ பெற்றுள்ளது.
இது குறித்து, இயக்குனர் வெற்றிமாறன் கூறுகையில், “72 வருட பாரம்பரியமிக்க வெனிஸ் திரைப்பட விழாவின் வரலாற்றில் ஒரு தமிழ்ப்படம் திரையிடப்படுவது இதுவே முதல் முறை” என்றார்.