பிரபல இந்தி நடிகர் அமிதாப்பச்சன் சமூக சேவையிலும் ஆர்வம் காட்டி வருகிறார்.
இந்த நிலையில் அவர் நாட்டைக் காக்கும் பணியின்போது வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்களின் விதவை மனைவிகளுக்கு ரூ. 1 கோடியும், கடன்களால் அல்லாடி வருகிற விவசாயிகள் கடன்களை திரும்பத் தருவதற்கு ரூ. 1 கோடியும் என மொத்தம் 2 கோடி ரூபாய் நிதி உதவி வழங்கப்போவதாக தகவல்கள் வெளியாகின.
இந்த தகவல்களை நடிகர் அமிதாப்பச்சன் இப்போது உறுதி செய்து உள்ளார்.
இது பற்றி அவர் டுவிட்டரில் வெளியிட்டு உள்ள பதிவில், “ ஆமாம், என்னால் முடியும். நான் செய்வேன்” என கூறி உள்ளார்.
இதில், பண உதவி உண்மையாகவே தேவைப்படுவோரை சென்று அடைவதை உறுதி செய்யும் தொண்டு அமைப்புகளை கண்டறிந்து பட்டியல் அளிக்குமாறு ஒரு குழுவை அமிதாப்பச்சன் அமர்த்தி உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
ஆனால் இது பற்றி அவர் டுவிட்டர் பதிவில் எதுவும் குறிப்பிடவில்லை.