துனீசியாவில் ஓரினச்சேர்க்கை சட்டவிரோதமானதாகவும் பரவலாக ஏற்றுக்கொள்ளப்படாததாகவும் கருதப்படுகிறது. ஆனால், 2011 புரட்சிக்கு பிறகு செயற்பாட்டாளர்கள் தங்கள் உரிமைகளுக்காகப் போராடினர். தற்போது ஓரினச்சேர்க்கை தைரியமாக வெளியே வந்து தங்களுக்கான சம உரிமை குறித்து பேசிவருகின்றனர்.
”துனீசிய வானொலியில், ஓரினச்சேர்க்கையாளர்களின் பிரச்சனை குறித்து பேசிய முதல் ஊடக நபர் நான்தான்” என்கிறார் ஷம்ஸ் ராட் எனும் வானொலி நிலையத்தின் இயக்குநர் பெஹடிட் பெல்ஹெடி.
துனீசியாவின் தலைநகரான துனீசில் உள்ள இயங்கும் ஷம்ஸ் ராட் வானொலி நிலையத்தைச் சுற்றிக்காண்பித்த 25 வயதான பெல்ஹெடி, இது அரபு உலகின் முதல் ஓரினச்சேர்க்கையாளர்கள், இருபால் உறவுக்கார்கள், திருநங்கை மற்றும் நம்பிகளுக்கான (LGBT) வானொலி நிலையம் என்கிறார்.
இது குறைந்த பட்ஜெட்டில் ஆனால் சிறந்த தொழில்முறையில் இயங்கும், இந்த வானொலி நிலையத்தில் ஏழு பேர் பணியாற்றுகின்றனர். நிலையத்தின் உட்புறத்தில் LGBT யின் ரெயின்போ கொடி நிறங்களில் வரையப்பட்டிருந்தது.
இந்த வானொலி நிலையம் இயங்க ஆரம்பித்த ஆறு மாதத்தில், 15 நாடுகளில் இருந்து 10,000 பேர் வானொலியைக் கேட்கின்றனர் என்றும், வாரத்தில் ஆறு நாட்கள் யு டியூப்பில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுவதாகவும் பெல்ஹெடி கூறுகிறார்.
இங்கு இசை ஒலிபரப்படுகிறது, பிரச்சனைகள் குறித்து ஆழமாக பேசப்படுகிறது. இங்கு பங்களிப்பை வழங்கிவரும் ஓரினச்சேர்க்கையாளர்கள் தங்கள் அடையாளத்தை வெளிப்படுத்த விரும்பவில்லை. இந்த வானொலி நிலையம் தொடர்ந்து இயங்குவதை மக்கள் விரும்பவில்லை. தனக்கு கொலை மிரட்டல்களும், மோசமான மேசேஜ்களும் வந்ததாக பெல்ஹெடி கூறுகிறார். அவர் தாக்கப்பட்ட சம்பவமும் நடந்தது.
துனீசியாவில் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு மூன்று வருடங்கள் வரை சிறை தண்டனை வழங்கப்பட்டது. ஓரினச்சேர்க்கையாளர்கள் என சந்தேகப்படும் நபர்களுக்கான கட்டாய பரிசோதனையை நிறுத்தப்போவதாகக் கடந்த வருடம்தான் அரசு அறிவித்தது.
ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு சிறை தண்டனைப் பதில் அபராதம் விதிப்பது, இதனைக் குற்ற வழக்கில் இருந்து நீக்குவது என அரசுக்கு பல பரிந்துரைகள் வழங்கப்பட்டன. ஆனால், அரசு இதனை ஏற்றுக்கொண்டதாக என்பது தெளிவாக தெரியவில்லை.
நகர்ப்புறத்திற்கு வெளியே வாழும் பெரும்பாலான துனீசிய மக்கள் பாரம்பரிய கலாசாரம் மற்றும் மத சிந்தனைகளைப் பின்பற்றுகின்றனர்.
அரபு உலகத்தில் ஓரினச்சேர்க்கை என்பது முறையற்ற நடத்தையாகப் பார்க்கப்படுகிறது. இதை மாற்றவே ஷம்ஸ் ராட் வானொலி நிலையம் பணியாற்றுகிறது என்கிறார் ஹியூமன் வாட்ச் அமைப்பின் மூத்த ஆராய்ச்சியாளர் நீலா கோஷல்.
ஓரினச்சேர்க்கையாளர்களின் கண்ணியத்தையும், சமத்துவத்தையும் ஊக்குவிப்பதை வானொலி நிலையம் நோக்கமாகக் கொண்டுள்ளது என்கிறார் பெல்ஹெடி.
துனீசில் உள்ள 24 வயதான முடி ஒப்பனையாளரான அப்திசலீம், இந்த வானொலி நிலையத்தைத் தான் தினமும் கேட்பதாக கூறுகிறார். மேலும், தன்னை வலுவானதாக உணர இது உதவுவதாகவும் அவர் கூறுகிறார்.
துனீசியாவில் புரட்சி ஏற்பட்டது திருப்புமுனையாக அமைந்தது. அப்போது முதல், தங்கள் உரிமைக்காக மக்கள் குரல் கொடுத்தனர்.” என்கிறார் கோஷல்.
”தற்போதைய காலங்களில், பெண்கள் உரிமை இயக்கங்களில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஓரினச்சேர்க்கையாளர் தங்கள் உரிமை குறித்து பேசுவதற்கும், பெண் இயக்கங்கள் ஊக்குவிக்கின்றன” எனவும் கூறுகிறார் கோஷல்.
ஜனவரி 2018-ல் மத்திய துனீசில் LGBT திரைப்படத் திருவிழா நடக்க உள்ளது.
”இது போராட்டங்களுக்கு கிடைத்த வெற்றி. அரசும், காவல்துறையும் இதில் தலையிடாமல் இருக்க வேண்டும்” என்கிறார் கோஷல்.
துனிசிய சமுதாயத்தில் ஏற்றுக்கொள்ளப்படாத கருத்துக்களை அந்த வானொலி நிலையம் ஊக்குவித்து வருகிறது என்கிறார் துனீசிய மசூதிகளின் இமாம் கவுன்சிலை சேர்ந்த ஹாஹிப் அல்-தின்
”அவர்களுக்குத் தண்டனை வழங்க வேண்டும் என நாங்கள் நினைக்கவில்லை. பாதிக்கப்பட்ட அவர்களுக்குச் சிகிச்சை தேவைப்படுகிறது” என்கிறார் அவர்.