சமூக ஊடக நிறுவனங்கள் வேண்டுமென்றே நிதி ஆதாயத்திற்காக பயன்பாட்டாளர்களை தங்கள் தயாரிப்புகளுக்கு அடிமைப்படுத்துகின்றன என்று அமெரிக்காவிலுள்ள தொழில்நுட்ப நகரமான சிலிக்கான் வேலியை சேர்ந்த வல்லுநர்கள் பிபிசியிடம் தெரிவித்துள்ளனர்.
“கொகைன் போல அடிமைப்படுத்தும் வகையில் உருவாக்கப்படும் சமூக வலைதளங்கள், பயனாளர்களை மீண்டும் மீண்டும் வரத் தூண்டுகிறது” என்று மோசில்லா நிறுவனத்தின் முன்னாள் ஊழியரான அசா ரஸ்கின் கூறுகிறார்.
“நீங்கள் ஒவ்வொரு முறை கைபேசியை பயன்படுத்தும்போது உங்களின் பயன்பாட்டு நேரத்தை அதிகரிப்பதற்கும், உங்களை அடிமைப்படுத்துவதற்கும் ஆயிரக்கணக்கான பொறியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர் என்பதே நிதர்சனம்” என்று அவர் மேலும் கூறுகிறார்.
கடந்த 2006ஆம் ஆண்டு உருவாக்கிய, ஒரு இணையதள பக்கத்தை திறந்த பிறகு, அதில் கிளிக் செய்யாமல் தொடர்ந்து கீழ்நோக்கி பக்கத்தை தள்ளும் தொழில்நுட்பத்தையே, தற்போது பெரும்பாலான நிறுவனங்கள் தங்களது செயலியின் மூலம் பயன்பாட்டாளர்களை அடிமைப்படுத்துவதற்கு பயன்படுத்துகின்றன.
“உங்களது உணர்ச்சியை அறிவதற்குரிய நேரத்தை மூளைக்கு கொடுக்கவில்லை என்றால் நீங்கள் தொடர்ந்து ஸ்க்ரோல் செய்துகொண்டே இருப்பீர்கள்” என்று அவர் கூறுகிறார்.
“புதிய கண்டுபிடிப்புகள் தேவைக்கு அதிகமான நேரத்திற்கு கைபேசியை பயன்படுத்துவதற்கு பயன்பாட்டாளர்களை தூண்டுகின்றன” என்றும், தான் இந்த தொழில்நுட்பத்தை உருவாக்கும்போது மக்கள் இந்தளவிற்கு அடிமையாவார்கள் என்றும் தனக்கு தெரியாது என்று ரஸ்கின் மேலும் கூறுகிறார்.
இதுபோன்று பயன்பாட்டாளர்களை அடிமையாக்கும் தொழில்நுட்பங்களை உருவாக்குவதற்கென்றே மிகப் பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் மென்பொருள் பொறியாளர்களை பணியிலமர்த்துகின்றன என்றும் அவர் கூறுகிறார்.
“சமூக வலைதளங்கள் சூதாடும் இயந்திரங்களை ஒத்தது” என்கிறார் கடந்த 2012ஆம் ஆண்டு ஃபேஸ்புக் நிறுவனத்திலிருந்து விலகியவுடன் அதன் சேவையை பயன்படுவதை நிறுத்துவதற்கு முயற்சித்த சாண்டி பாரக்கிளஸ்.
“ஃபேஸ்புக்கிலிருந்து வெளியேறுவதற்கு முயற்சிப்பதை சிகரெட்டை விடுவதைபோல உணர்ந்தேன்” என்று அவர் கூறுகிறார்.
ஃபேஸ்புக் நிறுவனத்தில் ஒன்றரை வருடங்கள் பணிபுரிந்தபோதே இதுபோன்ற பிரச்சனைகளை தானும், தன்னுடன் பணிபுரிவர்களும் உணர்ந்ததாக அவர் கூறுகிறார்.
“ஆனால், ஃபேஸ்புக் உண்மையிலேயே தொடர்ந்து பயன்படுத்தும்போது இதொரு பழக்கமாகவும், அடிமையாக்கும் என்பது குறித்த விழிப்புணர்வு மக்களிடையே உள்ளது.”
“அதாவது பயனாளர்களை தங்களது தயாரிப்பில் ஈடுபடுத்தி, அவர்களது வாழ்க்கையின் நேரத்தை உறிஞ்சி குடித்துவிட்டு, பிறகு அவர்களின் கவனத்தை விளம்பரங்களை நோக்கி நகர்த்துவதையே இதுபோன்ற நிறுவனங்கள் தங்களது வியாபார நோக்கமாக கொண்டுள்ளன” என்று அவர் கூறுகிறார்.
ஆனால், இதை மறுக்கும் ஃபேஸ்புக் நிறுவனம், “மக்களை அவர்களின் நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் அவர்கள் விரும்பும் விடயங்களுடன் இணைப்பதற்காகவே” உருவாக்கப்பட்டுள்ளதாக பிபிசியிடம் கூறியுள்ளது.
சமூக வலைதள பயன்பாட்டாளர்களை மிகவும் மயக்கும் விடயமாக சிரிப்பு, இதயம் அல்லது ரீடிவீட் வடிவில் வரும் லைக்குகள் உள்ளன.
ஃபேஸ்புக்கின் அடிப்படை விடயமான லைக் பட்டனை உருவாக்கியவர்களில் ஒருவரான லே பெர்ல்மன், தான் ஃபேஸ்புக்கிலிருந்து விலகியவுடன், அதை பயன்படுத்துவதை நிறுத்துவதற்கு முயற்சித்ததாக கூறுகிறார்.
“நான் தனியாக இருப்பதை போன்று உணர்ந்தால், ‘கைபேசியை பயன்படுத்த வேண்டும்’ என்றும், ‘நான் பாதுகாப்பற்று உணர்ந்தேன்’,’ ‘கைபேசியை பயன்படுத்த வேண்டும்’ என்றும்'” ஃபேஸ்புக்கிற்கு தான் அடிமையாகிவிட்டதாக அவர் கூறுகிறார்.
இவ்வாறு, எல்லாவற்றிற்கும் ஃபேஸ்புக்கை பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணம் மேலோங்க துவங்கியபோது தானும் அதற்கு அடிமையாகிவிட்டதை உணர்ந்ததாக அவர் கூறுகிறார்.
சமூக வலைத்தளங்களை அதிகமாக பயன்படுத்துவதற்கும் மனஅழுத்தம், தனிமை மற்றும் பல விதமான மனநலம் சார்ந்த பிரச்சனைகளுக்கும் தொடர்பு இருப்பதை ஆய்வுகள் உறுதி செய்துள்ளன.
பிரிட்டனிலுள்ள இளம் பருவத்தினர் ஒரு நாளைக்கு 18 மணிநேரத்தை தங்களது கைபேசியில் செலவிடுகின்றனர். அதில் பெரும்பான்மையான நேரத்தை சமூக வலைதளங்களில் செலவிடுகின்றனர்.
சமூக வலைதள செயலிகள் தங்களுக்கு பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன என்று நினைக்கும் இளைஞர்கள், அதுபோன்ற செயலிகளை கைபேசியிலிருந்து நீக்கிவிட வேண்டும் என்று பெர்ல்மன் கூறுகிறார்.
கடந்த வருடம் ஃபேஸ்புக்கின் நிறுவனர் தலைவரான சீன் பார்க்கர், அந்நிறுவனம் பயன்பாட்டாளர்கள் அதிகபட்ச நேரத்தை தனது செயலியில் செலவிட வைப்பதை இலக்காக கொண்டுள்ளதாக பொதுவெளியில் தெரிவித்தார்.
மேலும், “மனிதர்களின் உளவியலில் பாதிப்பை உண்டாக்குவதாகவும்” கூறினார்.
தான் உருவாக்கிய ஃபேஸ்புக்கின் லைக் பட்டன் ஒருவரை அடிமையாக்கும் அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று நினைக்கவில்லை என்று அவர் கூறுகிறார்.
ஆனால், இதே சமூக வலைதளம் பலருக்கு நன்மைகளை விளைவிப்பதாகவும் அவர் நம்புகிறார்.
தங்களது செயலியில் பயன்பாட்டாளர் ஒருவர் கடந்த ஏழு நாட்களில் செலவிட்ட நேரத்தை தெரிந்துகொள்ளும் வகையிலான ஒரு வசதியை ஏற்படுத்துவதற்கு ஃபேஸ்புக் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.