இந்தி சினிமா உலகில் கடந்த 1980 ஆம் ஆண்டுகளில் கொடி கட்டி பறந்தவர் நடிகர் மிதுன் சக்கரவர்த்தி. இவர் சினிமா துறையில் மட்டுமின்றி நட்சத்திர ஓட்டல்களையும் நடத்தி வருகிறார்.
நடிகர் மிதுன் சக்கரவர்த்தி மகன் மகாச்சே, நடிகை மடால்ஷா ஆகியோருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. இந்த திருமணத்தை கடந்த 7-ந் திகதி ஊட்டியில் நடத்த மிதுன் சக்கரவர்த்தி திட்டமிட்டு இருந்த நிலையில் மகாக்சே மீது அவரது முன்னாள் காதலி டெல்லி போலீசில் பாலியல் புகார் கொடுத்திருந்தார். அதில் மகாக்சேதன்னை ஏமாற்றி வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு இருப்பதாகவும், இந்த திருமணத்தை தடுத்து நிறுத்த வேண்டும் கூறி இருந்தார்.
இதனால் கடந்த 7-ந் திகதி நடைபெற இருந்த திருமணம் திடீரென நிறுத்தப்பட்டது. இதற்கிடையே மகாக்சே தனக்கு முன் ஜாமீன் வழங்க கோரி டெல்லி கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். அதில் முன் ஜாமீன் கிடைத்தது.
இந்த நிலையில், ஊட்டியில் மிதுன் சக்கரவர்த்திக்கு சொந்தமான ரிசார்ட்டில் மகாக்சே- மடால்ஷா திருமணம் நேற்று ரகசியமாக நடைபெற்றது.
அடர்ந்த வனப்பகுதிகளுக்கு நடுவே உள்ள இந்த ரிசார்ட்டில் திருமணம் நடந்ததால் வெளியில் யாருக்கும் தெரியவில்லை. நேற்று மாலை தான் இந்த ரகசிய திருமணம் குறித்த தகவல் வெளியானது. இதனை தொடர்ந்து மகாக்சே- மடால்ஷா திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படமும் வெளியானது.