கேரளாவின் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள வழூவூரை சேர்ந்த அனூப் என்பவரின் மனைவி பெத்தனா. மூன்று மாத கர்பிணியாக இருந்த பெத்தனா கடந்த ஜனவரி மாத தொடக்கத்தில் கீழே விழுந்து தலையில் அடிபட்டதால், கோமா நிலைக்கு சென்றார்.
இயல்பு வாழ்க்கை முடங்கிய நிலையில் பேச்சு, இயக்கம் இன்றி படுத்த படுக்கையாகிவிட்ட அவரை, அனூப் உடனிருந்து கவனித்து வந்துள்ளார்.
நிறைமாத கர்பிணி கோமா நிலையில் இருப்பது அவரது குடும்பத்தை துன்பத்தில் ஆழ்த்திக்கொண்டே இருந்துள்ளது.
இந்நிலையில், கடந்த 14 ஆம் திகதி தனியார் வைத்தியசாலையில் பெத்தனாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது.
தனது குழந்தைக்கு எல்வின் என பெயரிட்ட அனூப், தாயிடம் பாலூட்டுவதற்காக குழந்தையை கொடுத்துள்ளார். குழந்தை பால் குடிக்கும் போது, பெத்தனாவின் முகத்தில் மாற்றம் ஏற்பட்டதை கண்டு மகிழ்ச்சியின் உச்சத்துக்கே அனூப் சென்றுள்ளார்.
“குழந்தை அழும் போதும், பால் குடிக்கும் போதும் பெத்தனாவின் முகத்தில் உணர்ச்சிகள் மாறுவது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. குழந்தையை பார்த்து அவள் சிரிக்கிறாள். விரைவில் எனது மனைவி இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவார் என்ற நம்பிக்கை தற்போது அதிகரித்துள்ளது” என அனூப் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.