கூலி திரைப்படத்தின் போது ஏற்பட்ட விபத்தில் தான் நலம் பெற பிராத்தித்த ரசிகர்களுக்கு பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் நன்றி தெரிவித்துள்ளார்.
1982 ஆகஸ்ட் 2 ஆம் திகதி கூலி திரைப்படத்தில் அமிதாப் பச்சன் மீது வில்லன் ஒருவர் கத்தியைக் கொண்டு தாக்குவது போல காட்சிகள் படமாக்கப்பட இருந்தன. இதற்காக நிஜக் கத்தியை பயன்படுத்த படக்குழுவினர் திட்டமிட்டிருந்தனர். ஆனால் திட்டமிட்டப்படி காட்சிகள் படமாக்கப்படவில்லை. படப்பிடிப்பின் போது வில்லனால் அமிதாப் உண்மையாக கத்தியால் குத்தப்பட்டார். குடலில் பலத்த காயமடைந்த அமிதாப் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த அவரது ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அமிதாப் குணம்பெற வேண்டி, மருத்துவமனை முன்பு திரண்டு உருக்கமாக பிராத்தித்தனர். இச்சம்பவம் நடந்து நேற்றோடு 33 ஆண்டுகள் நிறைவடைகின்றன.
இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் அமிதாப் கூறுகையில், “மருத்துவமனையில் இருந்து நான் வீடு திரும்பினேன். அப்போது என்னை பார்த்து என் தந்தை கண் கலங்கினார். அவரது கண்களில் இருந்து கண்ணீர் வருவதை அப்போது தான் நான் பார்த்தேன். நான் குணம்பெற வேண்டி எனக்காக பிராத்தித்த அனைவருக்கும் எனது இரு கைகளையம் கூப்பி நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். கூலி பட ஷூட்டிங்கில் இருந்து உயிர் தப்பியது மறுபிறவி” என்றார்.