‘கிரி’, ‘குத்து’, ‘பொல்லாதவன்’ உள்ளிட்ட தமிழ்ப் படங்களிலும், கன்னடப் படங்களிலும் நடித்தவர் ரம்யா. கர்நாடகத்தை சேர்ந்த இவர் சில வருடங்களுக்கு முன் காங்கிரசில் சேர்ந்து அரசியலில் குதித்தார்.
முதலில் சட்டசபை இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் பாராளுமன்ற தேர்தலில் மாண்டியா தொகுதியில் இருந்து எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஆனால், கடந்த 2014–ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் நாடு முழுவதும் மோடி அலை வீசியதால் கர்நாடகத்தில் ரம்யா தோல்வி அடைந்தார். இந்த நிலையில் காங்கிரசில் ரம்யாவுக்கு எதிர்ப்பு கிளம்பியது. தனிப்பட்ட முறையிலும் அவரை கடுமையாக விமர்சித்தார்கள்.
இதனால் அரசியலில் இருந்து விலகினார். லண்டன் சென்று ஓய்வு எடுத்தார். அங்கிருந்து திரும்பிய ரம்யா மீண்டும் அரசியலில் ஆர்வம் காட்டி வருகிறார். புனேயில் சினிமா மற்றும் தொலைக்காட்சி தொழில்நுட்ப கல்லூரி விவகாரம் தொடர்பாக போராட்டம் நடத்தியவர்களை காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி சந்தித்து ஆதரவு தெரிவித்தார். இதில் ராகுல் காந்தியுடன் ரம்யாவும் கலந்து கொண்டார்.
அதன்பிறகு மாண்டியாவில் கடன் பிரச்சினையால் தற்கொலை செய்த விவசாயிகளின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது ரம்யா நிருபர்களிடம் கூறும்போது, ‘‘கர்நாடக காங்கிரஸ் மூத்த தலைவர் எஸ்.எம்.கிருஷ்ணாவை சந்தித்த பின்பு மீண்டும் தீவிர அரசியலில் ஈடுபட திட்டமிட்டு இருப்பதாக தெரிவித்தார்.
மேலும் அவர் கூறியதாவது:– லண்டனில் அரசியல் தொடர்பான பல்வேறு விஷயங்கள் பற்றி படித்தேன். பின்னர் எஸ்.எம்.கிருஷ்ணாவை சந்தித்தேன். அவர் எனக்கு பல ஆலோசனைகள் வழங்கினார். சமீபத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, எஸ்.எம். கிருஷ்ணாவிடம் பேசி விவசாயிகள் பிரச்சினை தொடர்பாக கர்நாடக காங்கிரஸ் அரசுக்கு உறுதுணையாக செயல்படுமாறு கேட்டுக் கொண்டார். அதன்பேரில் என்னையும் விவசாயிகள் பிரச்சினையில் கவனம் செலுத்த எஸ்.எம்.கிருஷ்ணா ஆலோசனைகள் வழங்கினார். இதைத் தொடர்ந்து விவசாயிகளின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினேன். இவ்வாறு ரம்யா கூறினார்.