இவர்களின் நோக்கம் குப்பைகளை சேகரித்து மறுசுழச்சி செய்து விற்பதோடு சுற்றுச்சூழலையும் பாதுகாக்க வேண்டும் என்பதே.
தூக்கி வீசப்படும் சிகரெட் துண்டுகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பினை தடுக்கும் வகையில் சேலத்தில் இளைஞர்கள் சிலர் வித்தியாசமான முயற்சியை தொடங்கியுள்ளனர். தாங்கள் சேகரிக்கும் சிகரெட் துண்டுகளை மறுசுழற்சி மூலம் பயனுள்ளதாக்கவும் திட்டமிட்டுள்ளனர்.
புகைப்பது உடல் நலத்திற்கு தீங்கானது, புற்று நோயை ஏற்படுத்தி மனிதனை மரண படுக்கைக்கு கொண்டு செல்கிறது. அதேபோல, புகைத்த பிறகு தூக்கி வீசப்படும் சிகரெட் துண்டுகளும் பலவிதமான சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
இவ்வாறு மண்ணில் புதையும் சிகரெட் துண்டுகளால் பூமி மாசுபடுவதுடன், சிகரெட் ஃபில்டரில் கலந்துள்ள பிளாஸ்டிக், நிலத்திற்கு தண்ணீர் செல்ல விடாமல் தடுக்கிறது. எத்தனையோ விழிப்புணர்வு ஏற்படுத்தியும், விற்பனை செய்யப்படும் சிகரெட் பெக்கெட்டில் எச்சரிக்கை விடுத்தும் கூட புகைப்பழக்கத்தை தொடர்பவர்களே அதிகம்.
புகைப்பதை தடுக்க முடியாவிட்டாலும், தூக்கி எரியப்படும் சிகரெட் துண்டுகளால் மாசு ஏற்படுவதையாவது தடுக்கலாம் என்ற கோணத்தில் களமிறங்கியுள்ளதாக சொல்கின்றனர் சேலத்தை சேர்ந்த இந்த இளைஞர்கள்.
“எந்த பொருளுக்கும் விலையுண்டு, மதிப்பும் உண்டு, மண்ணையும் பாதுகாப்போம், குப்பை பொருளையும் பயன்பாட்டிற்க்கு கொண்டுவருவோம். இதற்கு ´சிகரெட் உண்டியல்´ திட்டம் மிகபயனுள்ளதாக அமையும்” என நம்பிக்கையோடு அவர்கள் தெரிவிக்கின்றனர்.
தங்கள் முயற்சியின் மூலம் புகைப்பவர்கள் மத்தியில் புதுவித விழிப்புணர்வை ஏற்படுத்த உள்ளதாகவும் ´குப்பைக்காரன்´ குழுவினர் கூறுகின்றனர்.
முதற்கட்டமாக சேலம் மாவட்டத்தில் உள்ள தேநீர் கடைகளில் சிகரெட் உண்டியல்களை வைத்து சிகரெட் துண்டுகளை சேகரிப்பதும், கடைகளில் சேகரிக்கப்படும் சிகரெட் துண்டுகள் ஒரு கிலோ நூறு ரூபாய் விலை கொடுத்து பெற்று செல்வதும் இத்திட்டத்தின் நோக்கமாகும்.
இவ்வாறு சேகரிக்கப்படும் சிகரெட் துண்டுகளை, மறுசுழற்சிக்கு கொண்டு சென்று அவற்றை பயனுள்ள உரமாக மாற்ற முடிவதோடு அதன் மூலம் ஏற்படும் மாசுபடுதலையும் தடுக்க முடியும் என்று கூறுகின்றனர் ´குப்பைக்காரன்´ குழுவினர்.
சிகரெட் உண்டியலை பற்றி இக்குழுவை சேர்ந்த அப்துல்கனி கூறுகையில், “புகைபிடிக்காமல் இருப்பதுதான் முதலில் வரையறுக்கப்பட வேண்டிய ஒன்று. அதேபோல, புகை பிடித்த பிறகு எறியப்படும் மீதி துண்டு கழிவுகளை முறையாக அப்புறப்படுத்த வேண்டும். இதுவும் கவனத்தில் கொள்ளவேண்டிய ஒன்றாகும்” என்றார்.
இது பற்றிய விழிப்புணர்வு புகைபிடிப்பவர்களுக்கும், பொதுமக்கள் அனைவருக்கும் அவசியம் வேண்டும் என்று கூறுகிறார் அவர்.
“புகைபிடித்தபின் எறியப்படும் எச்சங்கள், அதாவது சிக்ரெட்-இன் பின்புறம் உள்ள பஞ்சு, மண்ணில் இயற்கையாக மக்குவதற்கு 3 மாதங்கள் முதல் 10 வருடங்கள் எடுக்கும். அதேபோல நிலத்தடி நீரை உறிந்து தக்கவைத்துக்கொள்ளும் திறன் உள்ளது. அதாவது 3 மில்லி லிட்டர் முதல் 10 மில்லி லிட்டர் வரை நீரை தக்கவைத்துக் கொள்ளும் திறனுடையது இப்பஞ்சு.”
“மேலும் இது முழுமையான பஞ்சு அல்ல. செலுலோஸ் அசெட்டேட் (Cellulose acetate) எனும் ஒருவகை பிளாஸ்டிக் வகையை சேர்ந்தது. இந்த சிகரெடில் இருக்கும் பஞ்சில் சில வேதியியல் பொருள்களை சேர்ப்பதன் மூலம் செலுலோஸ் அசெட்டேட் எனும் பாலிமரை தனியே பிரித்து பஞ்சை தனியாக உபயோகபடுத்த இயலும். மீதம் உள்ள இதர பொருட்களான புகையிலை மற்றும் காகித துண்டுகளை உரமாக பயன்படுத்த இயலும்” என்கிறார் குப்பைக்காரன் குழுவை சேர்ந்த அப்துல்கனி.