பல்வேறு தீவுகளை கொண்ட இந்தோனேசியா நாடு அதிக அளவில் நிலநடுக்கம் ஏற்படும் நெருப்பு வளைய பகுதியில் அமைந்துள்ளது. இதனால் இங்கு அடிக்கடி பூகம்பம் ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில், சுமத்ராவை ஒட்டியுள்ள பாலி மற்றும் லம்பாக் தீவின் அருகே நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7 ஆக நிலநடுக்கம் பதிவானதாக அமெரிக்க புவிசார் ஆய்வு மையம் தெரிவித்தது.
இந்த நிலநடுக்கத்தால் அப்பகுதியில் இருந்த பல வீடுகளும், கட்டிடங்களும் இடிந்து விழுந்தன. இதனால் மக்கள் அலறியடித்து கொண்டு தெருக்களில் தஞ்சம் புகுந்தனர். இடிபாடுகளில் சிக்கி 91 பேர் பலியாகினர்.
இந்த நிலநடுக்கம் அருகாமையில் உள்ள பாலி நகரத்திலும் உணரப்பட்டது. அப்போது அங்குள்ள மசூதிகளில் மாலை வேளை தொழுகை நடந்து கொண்டிருந்தது. நிலநடுக்கத்தால் அங்குள்ள ஒரு மசூதி கட்டிடம் பெரிய அளவில் அதிர்ந்தது.
நிலநடுக்கம் போன்ற வேளைகளில் பாதியில் தொழுகையை முடித்து கொண்டு உயிரை பாதுகாத்து கொள்ளலாம் என ஒரு கருத்து உள்ளதால் அவருக்கு பின்னால் நின்று தொழுதவர்களில் பலர் உயிர் பயத்தில் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.
ஆனால், இறை வணக்கமான தொழுகையில் ஒருமுகப்பட்டு இருக்கும் வேளையில் இதைப்பற்றி கவலைப்படாத அந்த மசூதியின் இமாம், நிலநடுக்கத்தால் தனது உடல் தள்ளாடி, தடுமாறிய வேளையிலும், பக்கவாட்டில் உள்ள சுவரின்மீது ஒருகையை தாங்கியபடி, தொழுகைக்கு தலைமை தாங்கி நடத்தி கொண்டிருந்தார்.
இதை அங்கிருந்த ஒருவர் கையடக்க தொலைபேசி மூலம் வீடியோவாக எடுத்து பேஸ்புக்கில் பதிவிட்டார். சிலமணி நேரத்தில் இந்த வீடியோவை உலகம் முழுவதிலும் உள்ள இலட்சக்கணக்கான மக்கள் பார்த்து வியந்ததுடன், பலருக்கு பகிர்ந்து, அவரது பக்தியை புகழ்ந்து, பாராட்டு மழை பொழிந்து வருகின்றனர்.