திமுக தலைவர் கருணாநிதி இன்று மாலை 6.10 மணியளவில் காலமானார். இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், தொண்டர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில், தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாளர் யூனியன் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறார்கள். அதில்,
ஐந்து முறை முதல்வராக இருந்தவர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர். தமிழில் பெயர் தாங்கி வந்த படங்களுக்கு முழு வரி விலக்கு வழங்கியவர் கலைஞர். தமிழக அரசு இடங்களில் படப்பிடிப்பு நடத்த மிக குறைந்த கட்டணம் நிர்ணயித்தவர் கலைஞர். தமிழ் திரையுலகினருக்கு மகாபலிபுரம் அருகே பையனூரில் வீடு கட்டிக் கொள்ள இடம் கொடுத்தவர் கலைஞர்.
சின்னத்திரை கலைஞர்களுக்கும் பல்வேறு சலுகைகளை வழங்கி ஊக்கப்படுத்தியவர் கலைஞர். நேரு முதல் மோடி வரை பதினைந்து பிரதமர்களையும், ராஜேந்திர பிரசாத் முதல் ராம்நாத் கோவிந்த் வரை பதினாலு குடியரசுத்தலைவர்களையும் கண்டவர் கலைஞர். பல துறைகளிலும் சாதனைகள் படைத்த கலைஞரின் மறைவு தமிழ்மக்களுக்கு, குறிப்பாக திரையுலகினருக்கு பேரிழப்பு. தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாளர் யூனியன் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.