வங்காளதேசத்தில் பிரபல தனியார் தொலைக்காட்சியான ஆனந்தா டி.வி.சேனலில் நிருபராக பணியாற்றி வந்தவர் சுபர்னா அக்டெர் நோடி (32). ஜக்ரோட்டோ பங்லா என்னும் நாளிதழிழ் ஒன்றிலும் இவர் நிருபராக உள்ளார்.
கணவரிடம் இருந்து விவாகரத்து மற்றும் ஜீவனாம்சம் கேட்டு வழக்கு தொடர்ந்துள்ள சுபர்னா, தனது 9 வயது மகளுடன் பாப்னா மாவட்டத்தில் உள்ள ராதாநகர் பகுதியில் தனியாக வசித்து வந்தார்.
இந்நிலையில், நேற்றிரவு சுமார் 11 மணியளவில் வீட்டின் அழைப்பு மணியோசை கேட்டு கதவை திறக்க வந்த சுபர்னாவை சுமார் பத்து பேர் கொண்ட கும்பல் கூரிய ஆயுதங்கள் சரமாரியாக குத்தியது. கூச்சல் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்து வீட்டினர் ரத்த வெள்ளத்தில் கிடந்த சுபர்னாவை அருகாமையில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் இன்று காலமானார். சுபர்னா மீது கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்ட கும்பலில் அவரது முன்னாள் கணவரும் இருந்ததாக கூறப்படும் நிலையில் இச்சம்பவம் தொடர்பாக ராதாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.