போலி திருமணம் ஒன்றில் பங்கேற்றபோது, சீன பெருநிலப்பகுதியை சேர்ந்த முன்பின் அறிந்திராத நபரை நிஜமாகவே திருமணம் செய்து ஏமாற்றப்பட்டுள்ளதாக 21 வயதான ஹாங்காங் பெண்ணொருவர் தெரிவித்திருக்கிறார்.
திருமணங்களை திட்டமிடும் வேலையில் சேர்வதற்கான அவருடைய பயிற்சியின் ஒரு பகுதியாக, ஏற்பாடு செய்யப்பட்ட போலி திருமணம் ஒன்றில் மணமகளாக நடிக்க சொல்லப்பட்டதாக இந்த பெண் கூறியுள்ளார்.
இந்த போலி திருமணத்தின்போது, இந்த பெண்ணும், மணமகனும் நிஜமான திருமண ஆவணத்தில் கையெழுத்திட்டுள்ளனர். ஹொங்கொங் திரும்பிய பின்னர்தான், தான் நிஜமாகவே திருமணம் செய்துள்ளதை இந்த பெண் அறியவந்துள்ளார்.
தற்போது இந்த திருமணத்தில் இருந்து விலக்கு பெறுவதற்கான சட்ட நடவடிக்கைகளில் அவர் இறங்கியுள்ளார். இந்த குற்றம் இழைக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் சரியாக இல்லாததால் உள்ளூர் காவல்துறை உதவ முடியவில்லை.
எனவே, இந்த பெண் ஹொங்கொங் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பை அணுகியுள்ளார்.
“திருமண மோசடியின் புதியதொரு வடிவம் இது” என்று பிபிசியிடம் கூறிய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் உரிமைகள் மற்றும் பயன்களின் குழு இயக்குநர் தொங் காம்ங்யியு, “தான் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளதாகவும், நவீன ஹாங்காங்கில் இப்படியும் நடக்கும் என்பதை நம்ப முடியவில்லை” என்றும் தெரிவித்துள்ளார்.
ஒப்பனை கலைஞர் தொழிற்பயிற்சி பட்டியல் ஒன்றை பேக்புக்கில் இந்த ´21 வயதான பெண்´ என்று குறிப்பிடப்படுபவர் மே மாதம் பார்த்துள்ளார்.
இதற்காக விண்ணப்பித்த பின்னர், திருமண திட்டமிடுபவராக வேலை செய்பவராக மாறுவதற்கு கூறிய இந்த நிறுவனம் அவரை சம்மதிக்கவும் வைத்துள்ளது.
ஹொங்கொங் இல் ஒரு வார இலவச பயிற்சி அளிக்கப்பட்ட அவரிடம், இந்த பயிற்சியில் வெற்றிபெற வேண்டுமானால், சீனாவின் பெருநிலப்பகுதியிலுள்ள ஃபூஜியான் மாகாணத்தில் நடைபெறும் போலி திருமணம் ஒன்றில் பங்கேற்பது அவசியம் என்று கூறப்பட்டுள்ளது. .
ஜூலை மாதம் உள்ளூர் அரசு மையத்தில் திருமண விண்ணப்ப ஆவணத்தில் அவர் கையெழுத்திட்டுள்ளார். இந்த திருமணம் பின்னர் செல்லுபடியாகாமல் போய்விடும் என்று அவளிடம் கூறப்பட்டதாக ´சௌத் சைனா மானிங் போஸ்ட்´ செய்தி வெளியிட்டுள்ளது.
ஆனால், அவர் ஹாங்காங் திரும்பிய பின்னர், அவருடைய பள்ளி சகா ஒருவர் இதுவொரு மோசடி என்பதை எடுத்துக்கூறி உணர்த்தியுள்ளார். இப்போது அவர் திருமணமானவர். விவாகரத்து பெறுவதற்கு விண்ணப்பிக்க வேண்டியிருக்கும்.
அவர் திருமணம் செய்து கெண்ட ஆண் யார் என்றும், திருமணத்திற்கு பின்னர் அவர் ஹொங்கொங் வந்துள்ளாரா என்றும் இன்னும் தெரியவில்லை.
“இந்த சூழ்நிலை பற்றி எதுவுமே அறிந்திராத இந்த 21 வயது பெண், சுய ஆதாயத்திற்காக பயன்படுத்தப்பட்டுள்ளார்” என்று தொங் கூறியுள்ளார்.
இந்த மோசடியால் அவருடைய திருமணம் பதிவு செய்யப்பட்டிருப்பது, அவருக்கு பெரும் உளவியல் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
ஒவ்வோர் ஆண்டும் சுமார் ஆயிரம் எல்லை கடந்த (ஹொங்கொங் – சீன) திருமண மோசடி வழக்குகளை ஹொங்கொங் பொலிஸ் விசாரணை செய்து வருகிறது.