பழம்பெரும் இந்தி நடிகையும், பா.ஜனதா எம்.பி.யுமான ஹேமமாலினி கடந்த மாதம் ராஜஸ்தான் மாநிலம் தவுசா என்ற இடத்தில் காரில் சென்று கொண்டிருந்தபோது, அவரது காரும், எதிரே வந்த மற்றொரு காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.
இந்த விபத்தில் எதிரே வந்த காரில் இருந்த ஒரு பெண் குழந்தை பலியானது. நடிகை ஹேமமாலினி பலத்த காயம் அடைந்தார். அவரது நெற்றியில் இருந்து ரத்தம் கொட்டியது. இந்த விபத்தில் பலியான பெண் குழந்தையின் தந்தை உள்பட மேலும் சிலர் படுகாயம் அடைந்தனர். விபத்தில் சிக்கிய நடிகை ஹேமமாலினியை அந்த வழியாக காரில் வந்த டாக்டர் சிவ்குமார் சர்மா என்பவர் மீட்டு தனது காரில் ஏற்றி ஜெய்ப்பூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தார்.
அதன் பின்னர் ஹேமமாலினி மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்ந்து முகத்தில் காயத்தினால் ஏற்பட்ட தழும்பை பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்து சரி செய்து கொண்டார். இந்தநிலையில் விபத்து நேர்ந்த போது காயம் அடைந்து வேதனையில் துடித்துக்கொண்டிருந்த தன்னை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்த டாக்டர் சிவ்குமார் சர்மாவை கவுரவிக்க நடிகை ஹேமமாலினி விரும்பினார். இதையடுத்து அவர் டாக்டர் சிவ்குமார் சர்மாவை தொடர்பு கொண்டு தனது வீட்டிற்கு வரும்படி அழைப்பு விடுத்தார்.
இந்த அழைப்பை ஏற்றுக்கொண்ட அவர் ஜூகுவில் உள்ள நடிகை ஹேமமாலினியின் வீட்டுக்கு வந்தார். அவரை குடும்பத்தினருடன் சேர்ந்து வரவேற்ற நடிகை ஹேமமாலினி, டாக்டர் சிவ்குமார் சர்மாவிற்கு அறுசுவை விருந்து அளித்தார். பின்னர் தன்னை விபத்தின்போது மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்ததற்காக நன்றி தெரிவித்து கொண்டார். மேலும் டாக்டர் சிவ்குமார் சர்மாவுக்கு அன்பளிப்புகள் வழங்கியும் கவுரவித்தார். அப்போது அவரது கணவரும், நடிகருமான தர்மேந்திரா, மகள் இஷாதியோல் ஆகியோர் உடன் இருந்தனர்.