கனடாவின் கிழக்கிலுள்ள தீவான நியூபவுண்ட்லாந்தில் நூற்றுக்கணக்கான மக்கள் வரிசையாக நின்று கஞ்சாவை வாங்கியுள்ளனர்.
உருகுவேக்கு அடுத்ததாக, கேளிக்கைக்காக கஞ்சாவை பயன்படுத்துவதை அனுமதிக்கும் இரண்டாவது நாடாக கனடா மாறியுள்ளது.
2001 ஆம் ஆண்டில் இருந்து மருத்துவ சிகிச்சைக்கு கஞ்சாவை பயன்படுத்துவது கனடாவில் அனுமதிக்கப்பட்டு வருகிறது.
போதை மருந்தை சாப்பிட்டு வாகனங்களை ஓட்டுவதை தடுக்க காவல்துறை பிரிவுகள் எந்த வகையில் தயாராக உள்ளன என்பது பற்றி கவலைகள் எழுந்துள்ளன.
புதிய சட்டங்கள் பற்றிய தகவல்கள் 15 மில்லியன் குழுக்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதோடு, பொது மக்களுக்கான விழிப்புணர்வு பரப்புரைகளும் நடத்தப்பட்டுள்ளன.
சட்டபூர்வமாக விற்கப்படும் கஞ்சாவை வாங்கி ´வரலாறு´ படைக்க வேண்டுமென செயின்ட் ஜான்ஸ் நகரை சேர்ந்த இயன் பவர், உள்ளூர் நேரப்படி இரவு 8 மணிக்கே வரிசையில் நின்றார்.
“கனடாவில் போதைக்கு விற்கப்படுவது சட்டபூர்வமாகிய பின்னர் கஞ்சாவை வாங்குகின்ற முதல் நபராக இருக்க வேண்டும் என்பது எனது கனவு. இறுதியில் அதனை வாங்குவதற்கு இங்குள்ளேன்” என்று இயன் பவர் கூறினார்.
போதைக்காக கஞ்சாவை பயன்படுத்துவதை குற்றமாக பார்ப்பதை முடிவுக்கு கொண்டு வருவதற்கு பல மாதங்களாக கனட மாகாணங்களும், மாநகராட்சிகளும் தயார் செய்து வந்தன.
போதைக்கு கஞ்சா எங்கு வாங்க வேண்டும், எங்கு சாப்பிடலாம் என்பதை முடிவு செய்கின்ற பொறுப்பு மாகாணங்களுக்கும், மாநகராட்சிகளுக்கு வழங்கப்பட்டிருந்தது.
இதனால், நாடு முழுவதும் ஏறக்குறைய கட்டுப்பாடற்ற சட்ட நிலைமையை உருவாகியுள்ளது.
கனடாவில் சட்டபூர்வமாக கஞ்சா விற்பனை செய்யப்படுவது தொடர்பாக சில முக்கிய பிரச்சினைகள் இன்னும் விடையின்றியே உள்ளன.
கஞ்சா உற்பத்தி மற்றும் அதற்கு உரிமம் வழங்குகின்ற முதல் ஆண்டாக இருப்பதால், கோரிக்கைகளை நிவர்த்தி செய்வதில் சிக்கல் தொடர்வதால், பற்றாகுறை ஏற்படலாம் என்று பல ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இதனுடைய சந்தையே இன்னும் குழந்தை பருவம் போல தொடக்க நிலையில்தான் உள்ளது.
கனடாவில் அதிக மக்கள் வாழும் மாகாணமான ஒன்டாரியோ, அடுத்த வசந்த காலத்தில் இருந்து சில்லறை மளிகை கடைகளில் இருந்து கஞ்சாவை வாங்க முடியும். இணையத்தில் பதிவு செய்தும் இதனை வாங்கும் வசதி இருக்கும்.
அதிக அளவில் கஞ்சா பயன்படுத்தப்படுகின்ற மாகாணமான பிரிட்டிஷ் கொலம்பியாவில் புதன்கிழமை மட்டும் சட்டபூர்வமான கடை ஒன்று திறந்திருக்கும் என்று தெரிகிறது.
சில்லறை விற்பனை இடங்கள் பரந்த அளவில் உருவாகுவது வரை இந்த சட்டம் முதலில் முன்மொழியப்பட்டபோது தொடங்கி, உருவாகியுள்ள உரிமம் பெறாத கஞ்சா சில்லறை வியாபாரிகள் கடைகளை வைத்திருப்பர்.
உரிமம் பெறாத கஞ்சா சில்லறை விற்பனை கடைகளை தடுப்பது தொடர்பாக பொலிஸார் உடனடியாக நடவடிக்கை எடுப்பார்களா அல்லது கண்டும் காணாமல் இருப்பார்களா என்பது தெளிவாக தெரியவில்லை.
கஞ்சா விற்பனையை அனுமதிக்கும் சட்டம் கனடாவை ஆளும் லிபரல் கட்சியின் தலைவரும், பிரதமருமான ஜஸ்டின் ட்ரூடோ 2015 ஆம் ஆண்டு தேர்தல் பரப்புரையில் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளது.
உலகிலேயே கஞ்சாவை அதிகமாக பயன்படுத்துவதில் கனடர்கள் இருப்பதால், சுமார் ஒரு நூற்றாண்டு பழமையான போதை மருந்து பயன்படுத்துவதை குற்றமாக்கும் சட்டம் செயல்திறனை இழந்துவிட்டது என்று ட்ரூடோ கூறினார்.
இந்த புதிய சட்டம் வயதுக்கு வராதோரிடம் போதை மருந்து கிடைப்பதை தடுத்து, குற்றவாளிகள் இதனால் லாபமடையாமல் இருக்க செய்யும் என்றும் அவர் கூறியுள்ளார்.