தமிழில் காதலர் தினம், கண்ணோடு காண்பதெல்லாம் படங்களில் கதாநாயகியாக நடித்தவர் சோனாலி பிந்த்ரே. இந்தி பட உலகிலும் முன்னணி நடிகையாக இருந்தார். இவர் 2004-ல் இயக்குனரும், தயாரிப்பாளருமான கோல்டி பெல்லை திருமணம் செய்து கொண்டு சினிமாவில் நடிப்பதை நிறுத்தி விட்டார்.
43 வயதாகும் சோனாலி பிந்த்ரே சமீபத்தில் தனக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாக சமூக வலைத்தளத்தில் தெரிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தினார். அவர் விரைவில் குணமடைய ரசிகர்கள் பிரார்த்தித்தனர். இப்போது அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வருகிறார். கீமோ சிகிச்சைக்காக தனது தலைமுடியை அகற்றினார்.
மொட்டை தலை தோற்றத்தில் இருக்கும் படத்தையும் வெளியிட்டு கண்ணீர் விட்டு அழுதபடி உருக்கமாக பேசி வீடியோ ஒன்றையும் பகிர்ந்தார். அதன்பிறகு தலையில் விக் வைத்து புதிய படத்தையும் வெளியிட்டார். அந்த படத்தின் கீழ், “எனது அழகிய சாபம் தோற்றம்தான். அழகாக இருக்க யாருக்குத்தான் ஆசை இருக்காது. அழகு என்பது உளவியல் தாக்கத்தை ஏற்படுத்தும். மகிழ்ச்சியாக இருப்பதற்கான வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ளுங்கள்” என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் தற்போது தலையில் பொருத்தமான புதிய ‘விக்’ அணிந்துள்ள தனது தோற்ற புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அமெரிக்காவை சேர்ந்த ஒரு பெண் சிகை அலங்கார நிபுணர் இந்த விக்கை தயார் செய்து கொடுத்து தனது தோற்றத்தை மாற்றியதாக அதில் குறிப்பிட்டு உள்ளார்.