எச்.ஐ.வி, எய்ட்ஸ் மற்றும் புற்றுநோயை குணப்படுத்தும் மருந்தை தாம் உருவாகியுள்ளதாக கூறிய, சிம்பாப்வே மத தலைவர் ஒருவரின் அலுவலகங்களை பொலிஸார் சோதனை செய்துள்ளனர்.
பிராபெடிக் ஹீலிங் அண்ட் டெலிவரன்ஸ் மினிஸ்ட்ரீஸ் (Prophetic Healing and Deliverance Ministries ) எனும் அமைப்பின் தலைவராக உள்ள வால்டர் மகாயா, அகுமா எனும் மூலிகை எச்.ஐ.வி வைரஸை அழிக்கும் ஆற்றலுடையது என்று கூறியிருந்தார்.
அகுமா மூலிகையால் செய்யப்பட்ட மாத்திரைகளை பல்லாயிரம் டொலர்கள் மதிப்பில் இணையதளம் மூலம் அவர் விற்பனை செய்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.
அந்த மாத்திரை இன்னும் பரிசோதிக்கப்படவில்லை என்றும் பதிவுசெய்யப்படவில்லை என்றும் கூறியுள்ள அதிகாரிகள், அது குணப்படுத்தும் என்று கூறுவது தண்டனைக்குரிய குற்றம் என்று கூறுகின்றனர்.
இந்த சம்பவத்துக்குப் பிறகு, அந்த மாத்திரைகள் எச்.ஐ.வி, எய்ட்ஸ் போன்றவற்றை குணப்படுத்தும் என்று தாம் கூறியதில் இருந்து பின்வாங்கியுள்ள அந்த சாமியார், தீவிரமான பரிசோதனைகளுக்கு அவை உட்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளதாக சிம்பாப்வே அரசுக்கு சொந்தமான ஹெரால்டு நாளிதழ் தம் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
ரத்த அழுத்தத்தை சீராக்கும் என்று கூறி லிப் ஸ்டிக் ஒன்றையும் மகாயா சமீபத்தில் சந்தையில் அறிமுகம் செய்திருந்தார்.