ஆர்யா, கிருஷ்ணா, தீபா சன்னதி, சுவாதி நடிக்க விஷ்ணுவர்தன் இயக்கியுள்ள படம் ‘யட்சன்’. இதன் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று நடந்தது.
விஷ்ணுவர்தன் பேசும்போது, ஆர்யாவுடன் இது எனக்கு 5–வது படம். அவரிடம் கதை சொல்ல வேண்டாம். அவரைப் பார்த்தாலே எப்போ மச்சான் ஷூட்டிங் போகலாம்?’ என்பார். இதில் ஆர்யா–கிருஷ்ணா இணைந்து நடித்திருக்கிறார்கள் என்றார்.
கவிஞர் பா.விஜய் விழாவில் பேசியதாவது:– இந்த படத்தின் அனைத்துப் பாடல்களையும் எழுதி இருக்கிறேன். நான், விஷ்ணுவர்தன், யுவன்சங்கர் ராஜா இணைந்து பணிபுரியும் 8–வது படம் இது. இந்த படத்தின் மூலம் ஆர்யா என்கிற நண்பனின் நட்பு கிடைத்தது. ஆர்யாவை ஏன் எல்லா பெண்களும், எல்லா கதாநாயகிகளும் விரும்புகிறார்கள் தெரியுமா? இதுவரை அது ஏன் என்று எனக்குத் தெரியாது. இப்போது புரிகிறது.
நட்புக்கு அவர் அவ்வளவு மரியாதை தருபவர். எளிமையாக, இனிமையாக பழகுவார். அதனால் தான் அனைவரும் அவரை விரும்புகிறார்கள். நான் இதுவரை 3 ஆயிரம் பாடல்கள் எழுதி இருக்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
ஆர்யா பேசும்போது, நான் இதுவரை நடித்த படங்கள் 25. என் படங்களுக்கு யுவன் சிறப்பாக இசை அமைத்துள்ளார். என் சினிமா பயணம் ‘தீப்பிடிக்க’ பாடலில் தொடங்கியது. இன்னும் தொடர்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் சுபா, நடிகை தீபா சன்னதி, ஒளிபதிவாளர் ஓம்பிரகாஷ், தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆடியோ சிடியை எழுத்தாளர் சுபா வெளியிட யுவன்சங்கர் ராஜா பெற்றுக் கொண்டார்.