நியூசிலாந்து பல்பொருள் அங்காடி கடை ஒன்றில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த ஸ்டிராபெரி பழங்களில் ஊசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சமீப மாதங்களில் இது இரண்டாவது சம்பவமாகும். முன்னதாக அவுஸ்திரேலியாவில் ஸ்டிராபெரி பழங்களில் ஊசி இருப்பதாக இதுவரை 200 முறை செய்திகள் வந்துள்ளன, அதனை தொடர்ந்து அங்கு அச்சமும் பரவியிருந்தது.
அவுஸ்திரேலியாவை தொடர்ந்து தற்போது நியூசிலாந்திலும் இந்த நிகழ்வு தொடர்கிறது. இது தொடர்பாக அவுஸ்திரேலியாவில் பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
சனிக்கிழமை அன்று வாங்கப்பட்ட இந்த ஸ்டிராபெர்ரி பழங்கள் நியூசிலாந்தில் பயிரிடப்பட்டதா அல்லது அவுஸ்திரேலியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டதா என்று தெரியவில்லை.
இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தங்களிடம் இருந்த அனைத்து ஸ்டிராபெர்ரி பழங்களையும் அந்த பல்பொருள் அங்காடி அகற்றிவிட்டது.
தற்போது போலிஸார் இது குறித்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். முன்னதாக செப்டம்பர் மாத தொடக்கத்தில் அவுஸ்திரேலியாவில் இருந்து இறக்குமதியான ஸ்டிராபெர்ரி பழங்களில் ஊசிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அதில் இருந்து நியூசிலாந்தின் இரண்டு முக்கிய உணவு முக்கிய விநியோக கடையான கவுண்ட் டவுன் மற்றும் ஃபுட்ஸ்டஃப்ஸ் அவுஸ்திரேலியாவில் இருந்து ஸ்டிராபெரி இறக்குமதியை நிறுத்திவிட்டது.
அவுஸ்திரேலியாவில் ஸ்டிராபெரி பழத்தில் ஊழியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டதுடன் அங்கு பல கடைகளில் உள்ள ஸ்டிராபெரி பழங்கள் அகற்றப்பட்டன.
ஆனால் பழங்களில் ஊசியிருப்பதாக வந்த சில தகவல்கள் போலியானதாகவும், சில சமூக வலைதளங்களில் பரபரப்பை கிளப்பவும் கூறப்பட்ட செய்திகளாக இருந்தன.